சுற்றி வளைக்கும் சீனா.. திணறி ஸ்தம்பிக்கும் தைவான்! போர் தொடங்குகிறதா? உற்று நோக்கும் உலக நாடுகள்
தைவான்: சீனா- தைவான் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா அடுத்து என்ன செய்யும் என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாகவே சர்வதேச அரங்கில் பேசுபொருளாக உள்ளது சீனா- தைவான் விவகாரம் தான். சமீபத்தில் தான் அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று இருந்தார்.
இந்த பயணத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் நாட்டில் இருந்த போதே பிரமாண்டமான போர்ப் பயிற்சிகளையும் செய்து எச்சரித்தது.

தைவான் விவகாரம்
சீனாவை ஆண்ட குமிண்டாங் அரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே கடந்த 1940களில் ஏற்பட்ட மோதலில் மாவோவின் கம்யூனிஸ்கள் வென்றனர். சீனா அவர்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் கமிண்டாங் ஆதரவாளர்கள் தைவான் பக்கம் சென்றுவிட்டனர். 1990களில் முக்கிய பொருளாதார சக்தியாக உருவெடுத்தது முதல் தைவான் தனது நாட்டின் பகுதி என்றே தொடர்ந்து கூறி வருகிறது.

நான்சி பெலோசி பயணம்
இதனால் தைவான் நாட்டை தனி நாடு என்று சொன்னாலோ, சர்வதேச அமைப்புகளில் தைவானை தனி நாடாக பிரதிநிதித்துவம் படுத்தப்பட்டாலோ சீனா டென்ஷன் ஆகிவிடும். அப்படித்தான் நான்சி பெலோசி தைவான் பயணத்திலும் கடுமையான எதிர்ப்புகளைக் காட்டி இருந்தது. இதனிடையே சீனா தங்கள் பிரதான தீவில் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாகத் தைவான் பரபர குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளது.

விலகிய சீனா
நான்சி பெலோசி பயணத்திற்குப் பின்பு, காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை வாபஸ் பெறுவதாக சீனா அறிவித்து உள்ளது. பருவநிலை மாற்றம் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், உலகின் இரு பெரும் நாடுகள் பருவநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கையை முறித்துக் கொண்டுள்ளது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

போர் பயிற்சி
கடந்த சனிக்கிழமை தைவான் சுற்றிப் போர்ப் பயிற்சிகளை சீனா தீவிரப்படுத்தியது. இப்படி தொடர்ச்சியாகப் பயிற்சிகளைச் செய்துவிட்டு, ஒரு நாள் சீனா முழு வீச்சிலான போரைத் தொடங்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். போரை ஆரம்பிக்க ஏதுவாகச் சீனா, தைவான் ஜலசந்தி பகுதியில் பல போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை நிறுத்தி உள்ளதாகச் சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

நெருங்கும் சீனா
தைவான் மீதான ஆதிக்கத்தைக் காட்டும் வகையில், இரவு நேரத்தில் தைவான் மேலே பறந்தவாறு சீன விமானி எடுத்த வீடியோவையும் சீனா வெளியிட்டு உள்ளது. சீன விமானங்களும் ஏவுகணைகளும் நேரடியாகத் தைவான் மீது பறந்ததாகச் சீனாவின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. இருப்பினும், இதற்குத் தைவான் தரப்பிலிருந்து எவ்வித பதிலும் இல்லை. சீனாவின் தொடர்ச்சியான நடவடிக்கையில் கோபமடைந்த அமெரிக்காவும், வாஷிங்டனில் உள்ள சீன தூதரிடம் கண்டனம் தெரிவித்து இருந்தது.

விலகல்
இந்தச் சூழலில் தான், பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாகச் சீனா அறிவித்துள்ளது. இந்த முடிவைப் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர். உலகின் இரு பெரும் பொருளாதார வலிமை மிக்க நாடுகள் இணைந்து பணியாற்றவில்லை என்றால் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முடியாது என்று விமர்சித்தனர். பருவநிலை மாற்றம் என்பது குறிப்பிட்ட நாட்டை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த உலகமே இதனால் பாதிக்கப்படும் என்பதால் உலக நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாய்ப்பு குறைவு
இருப்பினும், தற்போதுள்ள சூழலில் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தைவான் விவகாரம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு நிலையை எட்டியுள்ளது. போர் ஏற்பட்டால் தைவானுக்கு ராணுவ உதவிகளைச் செய்வோம் என அமெரிக்காவும் உறுதி அளித்து உள்ளது. இதனால் இப்போதைக்கு இரு தரப்பிற்கும் இடையே பிரச்சினை ஓயாது. அதேநேரம் இது உக்ரைன் போரைப் போல மற்றொரு போராக மாறினால் அதன் பாதிப்பு மிக மோசமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications