எனக்கு ஏதாவது நேர்ந்தால் நவாஸை பழி வாங்க வேண்டும்... தொண்டர்களிடம் சத்தியம் வாங்கிய இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு முக்கியக் காரணமான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பழி வாங்க வேண்டும் என தனது தொண்டர்களிடம் சத்தியம் வாங்கி பரபரப்பை உண்டாக்கியுள்ளார் இம்ரான்கான்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கையுடன், தனது பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான்.

லாகூர் நகரைத் தொடர்ந்து தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தை முற்றுகையிட்டு இம்ரான்கான் தனது தொண்டர்களுடன் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே, தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்த பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும். இன்னும் 48 மணி நேரத்துக்குள் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சங்களை முன்வைத்து தாஹிர் உல் காத்ரி போராடி வருகிறார். இவரது தலைமையில் கராச்சி நகரில் இருந்து புறப்பட்ட பேரணியும் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ளது.
இதனால் கலவரம் மூளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ராணுவத்தினரும், போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலக இம்ரான்கான் விதித்திருந்த 48 மணிநேர கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பு படையினரால் தடைசெய்யப்பட்டுள்ள பிரதமரின் இல்லம் மற்றும் நாடாளுமனறம் அமைந்துள்ள பகுதியை நோக்கி தடைகளை மீறி முன்னேறிச் செல்லுமாறு தொண்டர்களுக்கு இம்ரான் கான் உத்தரவிட்டார்.
அப்போது தனது தொண்டர்கள் மத்தியில் பேசிய இம்ரான்கான், ‘இந்த போராட்டத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்தால் நவாஸ் ஷெரிப்பை பழி வாங்குவோம் என்று நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
இதைக் கேட்டு ஆவேசமடைந்த அவரது கட்சி தொண்டர்கள், ‘நவாஸ் ஷெரிப்பை பழி வாங்குவோம்' என உறுதியேற்றனர்.
இதேபோல், தாஹிர் உல் காத்ரி தலைமையிலான ஆயிரக்கணக்கான தொண்டர்களும் தடைசெய்யப்பட்ட பகுதியை நோக்கி முன்னேறிச் செல்ல தொடங்கியுள்ளனர்.
ராணுவம் மற்றும் போலீசாரின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக இரண்டு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் கைகளில் பயங்கர ஆயுதங்களை ஏந்தியபடி செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications