காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் குண்டுவெடிப்பு.. ராக்கெட் வீசி தலிபான் தாக்குதல்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் ராக்கெட் வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் செப்டம்பர் 9 தீவிரவாதத் தாக்குதல் நடந்ததன் நினைவு நாளின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் பெரிய அளவில் பாதிப்பில்லை. காம்பவுண்டு வளாகத்தில் ராக்கெட் விழுந்து வெடித்தது. யாரும் இதில் காயமடையவில்லை.

ராக்கெட் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக வளாகத்தில் பெரும் புகை சூழ்ந்தது. இதற்கு அருகில்தான் நேட்டோ அலுவலகம் உள்ளது. அங்கும் யாருக்கும் பாதிப்பில்லை.
அமெரிக்கா - தலிபான் இடையில் நடந்து வந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் நடந்துள்ள முதல் தாக்குதல் இது.
கடந்த வாரம்தான் தலிபான் தீவிரவாதிகள் 2 கார் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலரின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தனர். அதில் நேட்டோவைச் சேர்ந்த 2 வீரர்களும் பலியானார்கள். இதையடுத்தே தலிபானுடனான பேச்சுவார்த்தையை டிரம்ப் ரத்து செய்ய உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று காபூல் தூதரகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தற்போது 14,000 அமெரிக்க படையினர் தொடர்ந்து தங்கி தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். இவர்களுக்காக பல நூறு கோடியை செலவிட்டு வருகிறது அமெரிக்க அரசு. நீண்ட காலமாக தலிபான்களுடன் போரில் ஈடுபட்டும் ஒரு லாபத்தையும் அமெரிக்கா இதுவரை அடையவில்லை. இதனால்தான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா இறங்கியது. தற்போது அதற்கும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications