'நீயெல்லாம் விளையாடலாமா..' வாலிபால் வீராங்கனை தலை துண்டித்த பின்.. தாலிபான்கள் செய்த பகீர் சம்பவம்
காபூல்: ஆப்கன் வாலிபால் அணியின் முக்கிய வீராங்கனை ஒருவரைத் தாலிபான்கள் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களை அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்னரே தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனை மீண்டும் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தாலிபான்கள் ஆட்சி அமைந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், பல்வேறு பகீர் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

பகீர் சம்பவம்
அப்படியொரு தகவல் தான் இப்போது வெளியாகியுள்ளது. காபூல் வாலிபால் கிளப்பின் வளர்ந்து வரும் நட்சத்திரமான மஹ்ஜாபின் ஹக்கிமி என்ற வீராங்கனையைத் தாலிபான்கள் தலையை வெட்டி படுகொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அந்த வீராங்கனையின் தலையின் படத்தை சமூக வலைத்தளங்களிலும் தாலிபான்கள் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இம்மாத தொடக்கத்தில் நடந்ததாக அவரது பயிற்சியாளர் தி பெர்சியன் இன்டிபென்டன்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார். இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இணையத்தில் பல்வேறு முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன.

முரணான தகவல்
தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே மஹ்ஜாபின் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. அதேநேரம் மற்ற தகவல்களில் அச்சம் காரணமாக மஹ்ஜாபின் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கழுத்து பகுதியில் மோசமான காயத்துடன் மஹ்ஜாபினின் உடலின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த காயம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான மருத்துவ தகவல்கள் இல்லை.

பயிற்சியாளர் பரபர தகவல்
அதேநேரம் ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்ட Payk புலனாய்வு இதழியல் மையம், மஹ்ஜாபினை தாலிபான்களே காபூலில் வைத்து தலையைத் துண்டித்து படுகொலை செய்ததாகத் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஊடகங்களிடம் எதுவும் சொல்லக் கூடாது என்று மஹ்ஜாபினின் குடும்ப உறுப்பினர்களைத் தாலிபான்கள் மிரட்டியதாகவும் அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஆப்கன் வாலிபால் வீராங்கனைகளில் இருவரால் மட்டுமே வெளிநாடுகளுக்குத் தப்பிக்க முடிந்ததாகவும் மற்றவர்கள் கடும் அச்சத்திலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏன் வாலிபால் வீராங்கனைகள் குறி
தாலிபான்கள் ஆட்சியை அமைத்தது முதலே இதுநாள் வரை சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற பெண் விளையாட்டு வீரர்களைக் குறிவைத்து நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியதாகத் தகவல் வெளியாகின. குறிப்பாக, ஆப்கன் வாலிபால் வீராங்கனைகள் கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்வதேச தொடர்களில் பங்கேற்றிருந்தனர். சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வந்த அவர்கள் குறித்து ஊரடங்களிலும் அடிக்கடி செய்திகள் வெளியாகின. இதனால் வாலிபால் வீராங்கனைகள் குறிவைத்து தாலிபான்கள் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video

தாலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தான் பெண்கள் வாலிபால் அணி, அவர்களை நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு வாலிபால் அமைப்புகளிடம் உதவி கோரியிருந்தது. இருப்பினும், வெறும் சிலரால் மட்டுமே பத்திரமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடிந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்ற ஜஹ்ரா ஃபயாஸி என்ற வாலிபால் வீராங்கனை, தாலிபான்கள் தனது சக வீராங்கனையைக் கொன்றதாக பிபிசியிடம் கூறினார். மேலும், பெண் விளையாட்டு வீராங்கனைகள் அச்சத்துடனேயே வாழ வேண்டியச் சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆப்கனில் தாலிபான்கள்
இந்த முறை தாலிபான்களின் ஆட்சி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கும் என்றும் இதில் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் எனத் தாலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. இருப்பினும், தாலிபான்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே உள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தாலிபான்கள் பெண்கள் விளையாடத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications