ஆப்கனில் உச்சக்கட்ட பதற்றம்..சுற்றி வளைக்கும் தாலிபான்கள்.. தனிமைப்படுத்தப்படும் தலைநகர்..பரபர தகவல்
காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வெறும் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள முக்கியமான கஜினி நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஒரே வாரத்தில் தாலிபான்கள் 10க்கும் மேற்பட்ட பிராந்திய நகரங்களைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கனில் தாலிபான்களுக்கும் அரசு தரப்பு படைகளுக்கும் இடையே தாக்குதல் உச்சத்தில் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆப்கன் படைகள் எந்தவொரு தாக்குதலுமில்லாமல் சரணடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இத்தனை காலமாக ஆப்கன் ஊரக பிராந்தியங்களை கைபற்றி வந்த தாலிபான்கள் இப்போது மாகாண தலைநகர்களைக் குறி வைத்துத் தொடங்கியுள்ளன.

10 பிராந்திய தலைநகர்
பிராந்திய தலைநகர்களைக் குறிவைத்து தாலிபான்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இப்போது வெறும் ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட பிராந்திய தலைநகர்களைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளை ஆப்கன் படைகள் ஏற்கனவே இழந்துவிட்டன. அமெரிக்கப் படைகள் இந்த மாதம் இறுதியில் முழுமையாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களில் தற்போதுள்ள ஆப்கன் அரசு முழுமையாகக் கவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஜினி நகர்
இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வெறும் 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள முக்கியமான கஜினி நகரை தாலிபான்கள் இப்போது வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளனர். இதனை ஆப்கன் உள் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆப்கனில் இரு முக்கிய நகரங்களான காபூல்- கந்தகரை இணைக்கும் நெடுஞ்சாலைக்கு நடுவே அமைந்துள்ள இந்த நகரம் மிக மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது..

தலைநகர் தனிமை
இதே போல இன்னும் ஒரு சில நகரங்களைத் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டால், ஆப்கன் தலைநகர் காபூல் தனிமைப்படுத்தப்படும். இப்போது அந்நாட்டு அதிபர் தொடங்கி அனைத்து முக்கிய அதிகாரிகளும் காபூல் நகரில் தான் உள்ளனர். இந்தச் சூழலில் காபூல் நகரின் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினால் ஆப்கன் அரசு கவிழப்போவது நிச்சயம் என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்,

அமெரிக்கா
இதனிடையே ஆப்கன் நிலை குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் புதிய மதிப்பீடுகளை வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கன் தலைநகர் காபூலை தாலிபான்கள் அடுத்த 30 நாட்களில் தனிமைப்படுத்திவிடுவார்கள் என்றும் இன்னும் 90 நாட்களில் காபூல் நகரைக் கைப்பற்றி ஆப்கன் அரசைத் தாலிபான்கள் கவிழ்க்க வாய்ப்புகள் அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

அமைதி
தற்போது இருக்கும் ஆப்கன் அரசு தாலிபான்களுடன் பவர் ஷேரிங் செய்யும் அளவுக்கு இறங்கி வந்துள்ளது. ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடரக்கூடாது என்பதே சர்வதேச நாடுகளின் விருப்பமாக உள்ளது. ஆனால், தற்போதுள்ள அஸ்ரப் கானி அரசு அமெரிக்காவின் நீட்சியாகக் கருதும் தாலிபான்கள் அஸ்ரப் கானி இருக்கும் வரை அமைதி திருப்ப வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications