ஆப்கனில் ஷாக்!புர்கா அணியாமல் காரில் சென்ற 21 வயது இளம்பெண்.. சுட்டுக்கொன்ற தாலிபான்கள்.. அட்டூழியம்
காபூல்: முகத்தை மூடும் வகையிலான புர்காவை அணியாமல் காரில் சென்ற 21 வயது இளம்பெண்ணைத் தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்ததாக ஆப்கானிஸ்தான் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டன. இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, மறுபுறம் தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன. தற்போது சுமார் 80% இடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே தாலிபான்கள் தெரிவிக்கின்றனர்.

பெண் படுகொலை
இந்நிலையில், புர்கா அணியாமல் சென்ற பெண்ணை தாலிபான்கள் சுட்டுக் கொன்றதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனின் பால்க் மாவட்டத்தை சேர்ந்த நஸனீன் என்ற 21 வயது பெண் முகத்தை மூடும் வகையிலான புர்காவை அணியாமல் காரில் சென்றுள்ளார். அதைப் பார்த்த தாலிபான் பயங்கரவாதி ஒருவர், அந்த பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஆப்கன் டைமஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரம் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

உண்மையான இஸ்லாமிய ஆட்சி
கடந்த சில வாரங்களாக ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதேநேரம் இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களும் பாலியாவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் பற்றி தாலிபான்கள் கூறுகையில், உண்மையான இஸ்லாமிய ஆட்சி முறையிலேயே பெண் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

1996-01 தாலிபான்கள் ஆட்சி
இதற்கு முன் ஆப்கானில் 1996-21 வரை தாலிபான்கள் ஆட்சி இருந்த போது, பெண்களுக்கு எதிராக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண் குழந்தைகள் பள்ளி செல்ல தடை விதிக்கப்பட்டன. அதேபோல பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்படும் பெண்கள் கற்களால் அடித்துக் கொலை செய்யப்படுவார்கள். இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படுமோ என்று அஞ்சப்படுகிறது.

மீண்டும் கட்டுப்பாடுகள்
தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகள் அணிந்தும், ஆண் துணை இல்லாமலும் பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது எனத் தாலிபான் அடிப்படைவாதிகள் அறிவித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றன. சில பகுதிகளில் ஆண் துணை இல்லாமல் வரும் பெண்களுக்குக் கடைக்காரர்களும் எந்தவொரு பொருட்களையும் விற்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.

தாலிபான்கள் தகவல்
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "புதிதாக அமையும் தாலிபான்களின் அரசில் பெண்கள் வேலைக்குச் செல்லவும் பள்ளி செல்லவும், அரசியலில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்படும். ஆனால், அவர்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும். மேலும், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, அவர்களுடன் துணைக்கு ஆண் உறவினர்கள் செல்ல வேண்டும். தாலிபான்கள் ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் படிக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே உள்ளது போலத் தொடர்ந்து செயல்படும்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications