பாக். ராணுவத்தினர் யு.எஸ்.க்கு உதவியதால்தான் 132 பள்ளிக் குழந்தைகள் சுட்டுப் படுகொலை: தலிபான் தளபதி
லண்டன்: பாகிஸ்தான் ராணுவத்தினர் அமெரிக்காவுக்கு உதவுவதாலேயே அவர்களின் பிள்ளைகளான பள்ளிக் குழந்தைகளை சுட்டுப் படுகொலை செய்திருப்பதாக ஈவிரக்கமற்ற வகையில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் தளபதி ஜிஹாத் யார் வாஸிர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவரில் ராணுவ பள்ளிக்குள் நேற்று நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேரை கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலைக்கு தாங்களே பொறுப்பு என்று பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு அறிவித்தது.
கடந்த சில மாதங்களாக வஜ்ரிஸ்தான் பகுதியில் ஆபரேஷன "ஜர்ப்-இ ஆஜ்ப்" என்ற பெயரில் பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக உக்கிர தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 1600 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கவே தாங்கள் பள்ளிக் குழந்தைகளை படுகொலை செய்ததாக தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு கூறுகிறது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான ஜிஹாத் யார் வாஸிர் கூறியுள்ளதாவது:
நீண்டகால யுத்தம்
அமெரிக்காவின் கைப்பாவையான பாகிஸ்தானுக்கு எதிராக நீண்டகால யுத்தம் நடத்துவதற்கு தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு தயாராகவே இருக்கிறது.
எங்களால் முடியும்
தற்போது நாங்கள் வேறு இடங்களில் நிலை கொண்டிருக்கலாம்... ஆனால் எங்களால் நாங்கள் நினைத்த இடத்தில் தாக்குதல் நடத்த முடியும்.
பழிவாங்குதலே
பெஷாவரில் சுட்டுக் கொல்லப்பட்ட பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் பாகிஸ்தான் ராணுவத்தினர். அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தவர்கள். வடக்கு மற்றும் தெற்கு வஜ்ரிஸ்தானில் எங்களது பிள்ளைகள் ஈவிரக்கமற்ற முறையில் குண்டு வீசி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரே காரணம். அதற்கு பழிவாங்கும் தாக்குதலே இது.
எங்கள் குழந்தைகளும் அப்பாவிகளே
பெஷாவர் பள்ளிக் குழந்தைகள் அப்பாவிகள் எனில் எங்களது குழந்தைகளும் அப்பாவிகள்தானே.. அமெரிக்காவுக்கு ஆதரவாக எங்கள் குடும்பங்கள் மீதும் குழந்தைகள் மீதும் குண்டுகளை வீசி அழிக்க வேண்டாம் என்று அந்த பள்ளிக் குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு அறிவுறுத்தட்டும்.
எங்களை தெரியலையே..
பெஷாவரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகள் கோட் சூட் டை என மேற்கத்திய கலாசாரத்துடன் இருக்கிறார்கள்.. ஆனால் எங்களது குழந்தைகள் இஸ்லாமிய கலாசாரப்படி உடை அணிந்தவர்கள்.. அதனால்தான் எங்களது குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போது ஊடகங்கள் மற்றும் மேற்குலகத்தின் கண்களுக்கு அது தெரியாமல் போனது.
தாக்குதல் தொடரும்
அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக மேலும் பல தாக்குதல்களை நடத்த இருக்கிறோம். இவ்வாறு ஜிஹாத் யார் வாஸிர் கூறினார்.