7 படிகளில் கொலு.. லட்சுமி கடாட்சம்.. அறுசுவை உணவு.. கலிபோர்னியாவில் நவராத்திரி விழா கொண்டாட்டம்
கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர் ஒருவர் வீட்டில் பாரம்பரிய முறைபடி நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்தவுடன் நவராத்திரி தொடங்கும். இந்த 9 நாட்களும் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய 3 தெய்வங்களை போற்றும் வகையில் தலா 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
இது மைசூரில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழாவையொட்டி மக்கள் அவரவர் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவர்.

7 படிகள்
3 படிகள், 5 படிகள், 7 படிகள், 9, 11 என நம் வசதிக்கேற்ப கொலு படிகளில் சுவாமி சிலைகளை வைத்து அலங்கரிக்கப்படும். அது போல் புது புது விஷயங்களை கருப்பொருளாக வைத்து பள்ளி கூடம், தேசிய ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒற்றுமை, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்டவை உணர்த்தும் வகையில் பொம்மைகள் அலங்கரிக்கப்படும்.

தீம்கள்
சுவாமி சிலைகள போக பூங்கா, நீர் வீழ்ச்சி, மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவைகளும் தத்ரூபமாக அமைக்கப்படும். மேலும் இந்த கொலு பொம்மைகளின் வாயிலாக மரங்களை நடுவோம், காடுகளை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் உள்ளிட்ட தீம்களும் இருக்கும்.

புரட்டாசி மாத அமாவாசை
காலம் காலமாக கொலு வைத்து வருபவர்கள் புரட்டாசி மாத அமாவாசை அன்று வைப்பர். சரஸ்வதி பூஜை அன்று முடிவுறும். இந்த இடைபட்ட நாட்களில் தினந்தோறும் சுவாமிக்கு நெய்வேத்யம் செய்யப்படும். பெண்கள், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுக்கப்படும். சுவாமியின் பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லப்படும்.

வெளிநாடு
இந்த பழக்கத்தை வெளிநாடு சென்றாலும் இன்னும் மறக்காமல் பலர் நவராத்திரியை கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் ஒன் இந்தியா வாசகரான அமெரிக்காவை சேர்ந்த ராஜி கோவிந்தராஜன், மன்டேக்காவில் உள்ள தனது வீட்டில் நவராத்திரியை கொண்டாடியுள்ளார். 7 படிகள் வைத்து அவற்றில் சுவாமி சிலைகளை வைத்து, சுற்றி சீரியல் விளக்குகளை அமைத்துள்ளார்.

நெய்வேத்யம்
கீழே கோலமிட்டு சுவாமிக்கு நெய்வேத்யம் செய்ய தேவையான பழங்கள், சுண்டல், பொரியை வைத்துள்ளார்கள். இவரது வீட்டில் வைக்கப்பட்ட கொலுவை காண 80 க்கும் மேற்பட்டோருக்கு ராஜி குடும்பத்தார் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நவராத்திரி பூஜையின் போது மகிஷாசுர மர்த்தனி, லட்சுமி அஸ்டகம், கந்த சஷ்டி கவசம் ஆகியவை பாடப்பட்டது.

குழந்தைகள் வீணை
அது போல் விழாவுக்கு வந்த குழந்தைகள் வீணை வாசித்தும் பியானோவை பிளே செய்தும் நிறைய பஜனை மற்றும் சுவாமி பாடல்களை பாடியும் வழிபட்டனர். விழா முடிந்ததும் விருந்தினர்களுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. பெண்களுக்கு வெற்றிலை பாக்கு , பூ, பழம், மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு உள்ளிட்ட சுபமான பொருட்கள் தாம்பூலமாக வழங்கப்பட்டன. பின்னர் மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications