தீஸ்தா நதி நீரில் கை வைக்கும் சீனா! ரூட் போட்டு கொடுக்கும் வங்கதேசம்? இந்தியாவின் உரிமைக்கு ஆபத்தா!
பெய்ஜிங்: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ் இன்று சீனாவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தில் தீஸ்தா நதி பற்றி பேச வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் நதி மீதான இந்தியாவின் உரிமை பறிக்கப்படும் என்கிற அச்சம் எழுந்திருப்பதாகவும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் உருவாகும் இந்த நதி வங்கதேசத்திற்கும் பாய்கிறது. ஆனால், இந்தியா அதிக அளவு நதி நீரை பயன்படுத்துவதால், எங்களுக்கு போதுமான அளவுக்கு நீர் கிடைப்பதில்லை என்று வங்கதேசம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

தீஸ்தா நதி மேல் இந்தியாவுக்கான உரிமை:
இந்த நதி சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஹிமாலயப் பகுதிகளில் உருவாகி, மேற்கு வங்காளத்தின் தர்மாபுரி, ஜல்பாய்குரி, குச்பியார் பகுதிகளை தொட்டு வங்கதேசத்தில் பாய்கிறது. அங்கு பிரம்மபுத்திரா நதியில் கலந்துவிடுகிறது. மொத்தம் 414 கி.மீ உள்ள இந்த நதி, 309 கி.மீ அளவுக்கு இந்தியாவிலும், 105 கி.மீ அளவுக்கு வங்கதேசத்திலும் பாய்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த நதி நீர்தான் வேளாண் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கிறது. இருப்பினும் வங்கதேசத்திலும் இந்த நதியை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர்.
எனவே நீரை சமமாக பங்கிட வேண்டும் என்று வங்கதேசம் தொடர்ந்து கோரி வருகிறது. ஷேக் ஹசினா அரசு இருந்தபோது, பங்கீடு விவகாரத்தை இந்தியா கவனித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தது. இருப்பினும் கடந்த 2020ம் ஆண்டு சீனா தீஸ்தா நதி நீர் மேலாண்மை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தது.
உரிமையை பறிக்கும் சீனா:
இதனையடுத்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்ற யூனூஸ், சீனா தீஸ்தா நதி நீரை மேலாண்மை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறார். இப்படி இருக்கையில் அவரது சீன பயணம் இந்த கோரிக்கையை மேலும் வலுவடைய செய்யலாம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் நடந்தால் இந்தியாவுக்கு நதி மீது இருக்கும் உரிமைகள் பறிபோக வாய்ப்பு இருக்கிறது.
இந்த திட்டத்தில் சுமார் ரூ.8,000 கோடி வரை முதலீடு செய்ய சீனா ரெடியாக இருக்கிறது. சீனாவின் பொதுத்துறை நிறுவனமான 'Power Construction Corporation of China' தான் இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
நீர் மேலாண்மை:
திட்டத்தின்படி வங்கதேசத்தில் சீனா புதிய அணைகளை கட்டும். அதில் நீரை தேக்கி வைத்து கோடை காலங்களில் பயன்படுத்தும். அணை மூலம் மின்சார தயாரிப்பு வசதியையும் சீனா செய்து கொடுக்கும். வெள்ள காலங்களில் இந்த நதி நிர் வங்கதேசத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கவும், வேளாணுக்கு எவ்வளவு நீர் தேவை? அதை எப்படி பங்கிட்டு கொடுப்பது போன்ற சிக்கலும் சீனாவின் நீர் மேலாண்மை திட்டம் கை கொடுக்கும் என வங்கதேசம் நம்புகிறது.
சீனாவை நம்பும் வங்கதேசம்:
எல்லாம் ஓகேதான். நதியின் பெரும்பாலான பகுதி இந்தியாவில்தான் ஓடுகிறது. அப்படி இருக்கும்போது இந்த நதியின் நீரை சீனா ஏன் மேலாண்மை செய்ய வேண்டும்? என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி. வங்கதேசத்தில் புதிய அரசு முளைத்திருப்பதால் அந்நாட்டு அரசு சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதே நேரம் இந்தியாவுடன் வெளிப்படையாக மோதல் போக்கில் ஈடுபடாமலும், பிடி கொடுக்காமல் நழுவியும் வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் சீன அதிபரை இன்று யூனூஸ் சந்திக்கிறார்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை:
ஏற்கெனவே இலங்கையில் புதிய அரசு உருவானபோது அதன் அதிபரான அனுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு சென்று முக்கிய அதிகாரிகளை சந்தித்து வந்திருந்தார். அதேபோல மாலத்தீவில் புதிய அதிபர் பொறுப்பேற்றபோதும் சீனாவுக்கு சென்று வந்தார். பாகிஸ்தானிலும் இதே கதைதான். ஆக தொடர்ச்சியாக இந்தியாவின் அண்டை நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் சீனாவுக்கு விஜயம் செய்து வருவது இந்தியாவுக்கு எச்சரிக்கை மணியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications