லண்டனில் பிரபாகரன் மகள் துவாரகா என்ற பெயரில் போலியாக நிதி வசூல் மோசடி? பகீர் தகவல்
பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் நிதி மோசடி நடக்கிறது என்கிறார் ஈழத் தமிழ் தலைவர் சித்தார்த்தன்.
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகள் துவாராக என போலியாக ஒருநபரை அடையாளம் காட்டி நிதி வசூல் நடைபெறுவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- டெலோ தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழ்நாட்டில் அறிவித்தார். இதனைமுன்வைத்து பல்வேறு செய்திகள் தொடர்ந்து வலம் வருகின்றன.
பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா இருவரும் ஜெர்மனியில் தலைமறைவாக உள்ளனர் என கூறப்பட்டது. பின்னர் மதிவதினி, துவாரகா இருவரும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. துவாரகா தலைமையில் ஒரு அரசியல் இயக்கம் தொடங்கப்படக் கூடும் எனவும் தகவல்கள் பரவின.

ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான சாத்தியமே இல்லை. பிரபாகரன், விடுதலைப் புலிகள் பெயரை வைத்து அரசியல் சதித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என பல்வேறு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டெலோ தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்பி கூறி இருப்பதாவது: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பே ஒரு நிதி சேகரிப்புக்கான நடவடிக்கைதான். சுவிட்சர்லாந்தில் இப்படி ஒரு நிதிசேகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டும் விட்டது.
இதனைத் தொடர்ந்து பிரபாகரன் மகள் துவாரகா, லண்டனில் இருக்கிறார்; அவர்தான் இவர் என பல இடங்களுக்கு அழைத்து சென்று நிதி சேகரிப்பு முயற்சிகள் நடைபெறுகிறது. அப்போது நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர் பிரபாகரன் மகள் துவாரகா இல்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. ஒரு இனத்துக்காக குடும்பத்தையே அர்ப்பணித்தவர் தம்பி பிரபாகரன். அவரை இவ்வாறு இழிவுபடுத்துவது சரியானது அல்ல. ஆகையால் இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு டெலோ சித்தார்த்தன் கூறினார்.

முன்னதாக தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், நெடுமாறனின் அறிவிப்பில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது முக்கியமான செய்தி அல்ல. நெடுமாறன் சொல்ல வந்த செய்தி இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பு இந்தியாவுக்கு ஆபத்து. அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். இது இந்தியாவுக்கோ உலக நாடுகளுக்கோ தெரியாத ஒன்றா? ஆனால் ஏன் நெடுமாறன் சொல்கிறார் எனில் இந்திய அரசாங்கம் இலங்கை பிரச்சனையில் தலையிட்டால், சீனா ஆக்கிரமிப்பை அகற்றினால் ஈழத் தமிழருக்கு பயன் தரும் என்கிற தோற்றத்தை உருவாக்குவது. ஈழத் தமிழர் நலனுக்காக இந்திய அரசு தலையிட்டு சிங்கள அரசுக்கு ஒரு அச்சுறுத்தலை தர வேண்டும் என்கிற செய்தி, தமிழ்நாட்டு தமிழருக்கும் உலகத் தமிழருக்கும் சொல்லப்படுகிறது. அதாவது நெடுமாறன் சொல்வது சரி.. உடனே இலங்கையில் இந்தியா தலையிட வேண்டும் என மத்திய அரசிடம் நாம் கோரிக்கை வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி செய்கிற போது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, தமிழ்நாட்டில் எதிர்ப்பு குறையும். தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்ய விரும்புகிறது. ஆனால் பாஜகவுக்கு எதிர்ப்பு இங்கு இருக்கிறது. இந்த எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும். அதற்கான ஒரு உத்திதான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பழ.நெடுமாறனின் அறிவிப்பு என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications