துருக்கியில் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமையகம் மீது தீவிரவாத தாக்குதல்! 5 பேர் பலி!
அங்காரா: துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கி தங்கள் ராணுவத்திற்கு தேவையான போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க, TUSAS எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறது. இது தலைநகர் அங்காராவிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள கஹ்ராமன்காசானில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று மாலை சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளே நுழைந்தனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, மோதல் வெடித்திருக்கிறது.

சந்தேக நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 12க்கும் அதிகமானவர்கள் மீது குண்டு பாய்ந்திருக்கிறது. தாக்குதலில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பதில் தாக்குதலில் இருவரும் சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனை துருக்கி அதிபர் எர்டோகன் உறுதி செய்திருக்கிறார். தாக்குதல் நடந்தபோது அவர், ரஷ்யாவின் காசன் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா, நேட்டோ உள்ளிட்டவை இரங்கல் தெரிவித்திருக்கின்றன.
தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இன்றும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், துருக்கி அதிபர் குர்தீஷ் போராளிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார். தென்கிழக்கு துருக்கியில் தன்னாட்சிக்காக அப்துல்லா ஒகாலனின் குழு போராடி வருகிறது. இந்த குழு ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் அமைப்பு என, மேற்கத்திய நாடுகளால் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த குழுவை சேர்ந்தவர்கள்தான் ஏரோஸ்பேஸ் நிறுவத்தின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என துருக்கி அரசு சந்துகம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications