4 பேரைக் கொன்று விமானத்தைத் திருடிய 67 வயது தாத்தா... மரண தண்டனை!
ஹவுஸ்டன்: அமெரிக்காவில் நான்கு பேரைக் கொன்று விமானத்தை திருடிய வழக்கில் 67 வயது முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ரசாயன விற்பனையாளராக இருந்து வந்தவர் போவர். இவருக்கு சிறிய விமானம் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக சிறிய விமானம் வைத்திருந்த ஒருவரிடம் சென்று பேரம் பேசியுள்ளார். கேட்ட விலைக்கு விமானத்தைத் தர உரிமையாளர் மறுத்ததால், ஆத்திரத்தில் அவரையும், அவருடன் இருந்த மூன்று பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் போவர். பின்னர், அந்த விமானத்தையும் அவர் திருடிச் சென்றார்.

இந்தச் சம்பவம் நடந்தது கடந்த 1983ம் ஆண்டு. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போவரைக் கைது செய்தனர். விசாரணையின் முடிவில் போவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து போவர் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று முன்தினம் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் போவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரணமடைந்த போவருக்கு தற்போது வயது 67 ஆகும். 32 ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு பேரைக் கொன்ற வழக்கில் தற்போது அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் மாகாண அரசு, 1982ல் அதாவது போவர் குற்றம் புரிவதற்கு முந்தைய ஆண்டுதான், மரண தண்டனை சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்தது. இம்மாகாணத்தில், இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 526 பேரில் போவர் தான் வயது மூத்தவர்.












Click it and Unblock the Notifications