”ஹலோ தலையில கத்திரிக்கோல் குத்திருச்சு எடுத்து விடுங்க” – கூலாக டாக்டர்களிடம் கேட்ட “ஜென்டில்மேன்”
லண்டன்: மெக்சிகோவில் தலையில் பாய்ந்த கத்திரிக்கோலுடன் மருத்துவமனைக்கு வந்தடைந்த ஒருவரால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்போகும் அளவுக்கு துன்பம் வந்தபோதும் நிதானமாகச் செயல்பட்ட இவரால் மெக்சிகோவே ஆடிப்போயுள்ளது.
மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய்.
நண்பருடன் உற்சாக பானம்:
எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று
நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.
கத்திரிக்கோலால் குத்து:
அப்போது அவர்கள் அருகில் இருந்த மைக்கேல் என்பவரிடம் குடிக்க ஏதாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவரோ திடீரென இவர் தலையில் கத்தரிக்கோலால் குத்தியிருக்கிறார்.
மருத்துவமனைக்கு விரைவு:
ரத்தம் சொட்டச் சொட்ட தரையில் சரிந்து விழுந்த ஜோனாஸை அவரது நண்பர் தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இரும்பு மனிதர்தான்:
ரத்தம் ஒழுக தலையில் குத்தப்பட்ட கத்திரிக்கோலுடன் மருத்துவமனைக்கு வந்த ஜோனாஸ் நடந்து சென்று வரவேற்பாளரிடம் நாகரீகமாகக் கை குலுக்கி விட்டு "எனக்கு ஒரு சின்ன பிரச்சினை, நீங்கள் உதவ வேண்டும்"என்று கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சையில் அனுமதி:
முதலில் விளையாட்டுக்காக இப்படி செய்கிறார்கள் என்றே ஊழியர்கள் நினைத்தனர். பிறகு விஷயம் புரிந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லவேளை பிழைத்துக் கொண்டார்:
கத்தரிக்கோல் மண்டை ஓட்டின் இடது புறத்திற்கு மேலே துளைத்து சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜோனாஸைத் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உண்மையான ஜென்டில்மேன்:
மருத்துவமனை ஊழியர்கள் இவரது நாகரீகமான நடத்தையை கிண்டல் செய்யும் விதமாக "ஜென்டில்மேன்" என்று அழைக்கின்றனர். ஆனால், ஜோனாஸ் உண்மையிலேயே "ஜென்டில்மேன்" தான் என்கின்றனர் மற்றவர்கள்.












Click it and Unblock the Notifications