அதான் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிச்சாச்சே.. இனிமேல் "மார்க்" பொழச்சுக்குவாரு...!
நியூயார்க்: "மார்க் வாட்னி"க்கு இனிமேல் பிரச்சினையில்லை பாஸ்.. அதான் செவ்வாய் கிரகத்துல தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிச்சாச்சே.. ஸோ, மார்க் குடிக்கக் கூட தண்ணி இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை... "தி மார்ஷியன்" படத்தைத்தான் சொல்கிறோம்.. வெள்ளிக்கிழமை வெள்ளித் திரைகளை சுட்டெரிக்கப் போகிறது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தி மார்ஷியன்.
இந்தப் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் திரவ நிலையிலேயே இருப்பதா நாசா உறுதி செய்தது. இந்த நேரத்தில் வெளியாகும் தி மார்ஷியன் படத்திற்கு நாசாவின் கண்டுபிடிப்பு ஒரு இலவச விளம்பரமாக மாறியிருக்கிறது.
செவ்வாய் கிரகத்தை நாம் இன்னும் எட்டிப் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். அங்கு மனிதனை இறக்கி விட்ட படம்தான் தி மார்ஷியன். பெரும் சுவாரஸ்யமான கதையாக இருந்தாலும் மகா தத்ரூபமாக இப்படத்தை எடுத்திருப்பதாக நாசாவின் விண்வெளி வீரர்களே பாராட்டித் தள்ளியுள்ளதால் படம் எப்படா வரும் என்று அனைவருமே அனல் பறக்கக் காத்துள்ளனர்.
காலத்திற்கேற்ற கற்பனை
காலத்திற்கேற்ப கற்பனை செய்வதில் ஹாலிவுட்டை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.. ஊரெல்லாம் இன்னும் ஆயா காலத்து கதைகளையே கட்டிப் பிடித்துக் கொண்டுள்ள நிலையில், ஹாலிவுட்டில் மட்டும் எப்பவுமே சற்று "மேலே"தான் சிந்திக்கிறார்கள்..!
செவ்வாய்க்கு ஒரு பயணம்
கதை ரொம்ப சிம்பிள்... செவ்வாய் கிரகத்திற்கு பயணமாகிறது 6 விண்வெளி வீரர்களைக் கொண்ட ஒரு நாசா குழு. ஏரிஸ்3 என்பது அந்த பயணத்தின் பெயராகும். இந்தக் குழுவினர் தங்களது பயணத்தின்போது பல சிரமங்களைச் சந்திக்கிறார்கள்.
கடும் புயலில் சிக்கி
செவ்வாய் கிரகத்திற்குப் போய்ச் சேர்ந்த பின்னர் அங்கு வீசும் கடும் புயலில் சிக்கிக் கொள்கிறது நாசா குழு. இதனால் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்து குழுவினர் புறப்பட்டுச் செல்கிறார்கள். தவறுதலாக தங்களுடன் வந்த மார்க் வாட்னியை (மாட் டேமன்) மறந்து விட்டு விடுகிறார்கள்.
தனிமையில்.. செவ்வாயில்
செவ்வாய் கிரகத்தில் தனிமையில் சிக்கிக் கொள்கிறார் மார்க். ஆனால் கலங்கிப் போய் விடாமல் உயிர் பிழைப்பதது எப்படி என்பது குறித்து யோசிக்கிறார்.
செவ்வாயில் தோட்டம் போட்டு
தன்னிடம் இருக்கும் சிறிய அளவிலான உணவை கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துகிறார். செவ்வாயின் தரைப்பரப்பில் சின்னதாக ஒரு தோட்டம் போடுகிறார். அங்கு செடி வளர்க்கிறார்.
ஒன்று திரண்ட உலகம்
மறுபக்கம் மார்க்கை பத்திரமாக மீட்டு பூமிக்குக் கொண்டு வர ஒட்டுமொத்த உலகமும் நாசாவின் பின்னால் அணிவகுக்கிறது. கடைசியில் என்ன நடக்கிறது.. மார்க் பூமிக்குத் திரும்பினாரா என்பதுதான் கதை.
நாவலின் மறுபக்கம்
தி மார்ஷியன் என்ற பெயரில் வெளி வந்த பிரபல நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ரிட்லி ஸ்காட். படம் முழுக்க பிரமாதப்படுத்தியுள்ளனராம்.
நட்சத்திரப் பட்டாளம்
மாட் டேமன், ஜெஸ்ஸிகா சேஸ்டைன், கிறிஸ்டின் விக், கேட் மாரா, மைக்கேல் பேனா, ஜெப் டேணியல்ஸ், சிவெடெல் எஜியோபோர், டோனால்ட் குளோவர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளது.
அக்டோபர் 2 முதல்
அக்டோபர் 2ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே நாசா விண்வெளி வீரர்கள் இந்தப் படத்தைப் பார்த்து விட்டனர். அதுவும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி. படம் அப்படியே தத்ரூபமாக இருப்பதாக அவர்கள் புகழ்ந்துள்ளனர். எனவே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.