டிரைவர்கள் இல்லாத கார்களை ஓட்டிப் பரிசோதிக்க "டுபாக்கூர்" நகரத்தை நிர்மானித்த ஆய்வாளர்கள்
மிச்சிகன்: அமெரிக்காவில் டிரைவர்கள் இல்லாத கார்களை ஓட்டி பரிசோதிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் எம்-சிட்டி என்ற போலியான நகரத்தை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த நகரத்தை உருவாக்கியுள்ளனர். இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டது.
10 மில்லியன் டாலர் செலவில் மிச்சிகன் மாநில போக்குவரத்து துறையும் (MDOT), மொபிலிடி டிரான்ஸ்பர்மேஷன் சென்டரும் (MTC) இணைந்து இந்தக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்திய மதிப்பில் இந்த நகரத்திற்கான கட்டுமானச் செலவு 63 கோடியே 60 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த நகரமானது டிரைவர் இல்லாத கார்களை ஓட்டிப் பரிசோதிப்பதற்காகவே உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு எம்.சிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது 32 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்து, ஸ்மார்ட் சிட்டி போன்ற தோற்றம் தருகிறது. பெயருக்குத் தான் போலி நகரமே தவிர, உண்மையான நகரத்தில் இருப்பது போல சாலைகள் மற்றும் அனைத்து போக்குவரத்து அம்சங்களும் உள்ளன.
நிஜ நகரத்து சாலைகளில் இந்த தானியங்கி கார்களை ஓட்டி பரிசோதித்தால் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.