‛மலைக்க வைக்கும் ஊதியம்’.. இஸ்ரேலில் கட்டட பணிக்கு மாதம் ரூ.1.36 லட்சம் சம்பளம் ஏன்? ரிஸ்க் இதுதான்
ஜெருசேலம்: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலில் தற்காலிக பணிக்கு இந்தியர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் இஸ்ரேலில் பணி செய்வது மிகவும் சவாலானது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விளக்கியுள்ளனர்.
மனிதர்களின் வரலாறு நெடுகவும் போர் தொடர்ந்துக்கொண்டே வந்திருக்கிறது. இப்படியாக நீண்ட காலமாக நடைபெறும் போர்களில் ஒன்றுதான் இஸ்ரேல்-ஹமாஸ் போர். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படையினரிடமிருந்து தப்பி, பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்த யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாட்டை உருவாக்கிக்கொள்ள முயன்றனர். இவர்களின் கோரிக்கைகளை அறிந்துக்கொண்ட அமெரிக்காவும், பிரிட்டனும் போரில் இவர்களை பயன்படுத்திக்கொண்டது.

இதற்கு கைமாறாக பாலஸ்தீனத்தில், இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க உதவி செய்தது. அகதிகளாக வந்தவர்கள் தங்கள் நாட்டை பிளவுபடுத்தி அதில் இஸ்ரேல் எனும் புதிய நாட்டை உருவாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத பாலஸ்தீனர்கள், இதற்கு எதிராக கிளர்ந்தனர். பதிலுக்கு இஸ்ரேல், முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிக்க முடிவெடுத்தது. இப்படியாக பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
இந்த போர் கடந்த ஆண்டு அக்டோபரில் மீண்டும் உச்சம் பெற்றது. இந்நிலையில், இஸ்ரேலில் வேலைக்கு செல்ல லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் முன்வந்திருக்கின்றனர். இதற்கு காரணம் இந்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் போட்ட ஒப்பந்தம்தான். கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையில் தற்காலிகமாக இந்திய தொழிலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மற்ற மாநிலங்களை விட அதிகபட்சமாக உத்தரப் பிரதேச இளைஞர்கள் இஸ்ரேல் செல்வதற்கு தயாராக இருக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) மற்றும் இஸ்ரேலிய அரசு நிறுவனமான மக்கள் தொகை, குடிவரவு மற்றும் எல்லை ஆணையம் (PIBA) ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு பிறகு உத்தரப் பிரதேச அரசாங்கம் இஸ்ரேலில் 10,000 வேலைகளுக்கான விளம்பரங்களை வெளியிட்டது. 21 முதல் 45 வயதுடைய இந்திய இளைஞர்கள் இரேலில் பணி செய்ய தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ.1.36 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். பெரும்பாலும் இந்த சம்பளம்தான் அதிக இந்திய இளைஞர்களை இஸ்ரேல் நோக்கி ஈர்க்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதில் இருக்கும் ரிஸ்க்கையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, இஸ்ரேலில் வேலை செய்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில் அங்கு போர் நடைபெற்று வருகிறது. இதுவரை 80-100 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டிருக்கின்றனர். மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து இஸ்ரேலில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் இருப்பதை போன்று இஸ்ரேலில் மருத்துவமனைகளை எளிதில் அணுக முடியாது. இது எல்லாவற்றையும்விட, அங்கு 1 கிலோ உருளைக்கிழங்கு ரூ.120, 1 லிட்டர் பால் ரூ.140, டூத்பேஸ்ட் ரூ.380 என விற்பனை செய்யப்படுகிறது.
இருப்பினும் மாதம் ரூ.6,000-8,000 வரை ஊதியம் பெறும் இளைஞர்கள் இஸ்ரேலுக்கு சென்றால் பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பி அங்கு செல்கின்றனர். அங்கு ஷட்டர் கார்பென்டர், இரும்பு வளைக்கும் பணி, பீங்கான் டைலிங் பணி, ப்ளாஸ்டெரிங் பணிக்குதான் ஆட்கள் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications