ஜப்பானில் குட்டி விமானம் விழுந்து நொறுங்கி விபத்து- விமானி உட்பட 3 பேர் பரிதாப பலி!
ஜப்பான்: ஜப்பானில் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தலைநகர் டோக்கியோவில் நேற்று காலை இந்த விபத்து நிகழ்ந்தது. டோக்கியோவின் சோஃபு விமான நிலையத்திலிருந்து, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் நான்கு பயணிகளும் ஒரு விமானியும் இருந்தனர்.

ஆனால் புறப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்கு உள்ளானது. அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதியில் நொறுங்கி விழுந்தது. நொறுங்கி விழுந்தவுடன் விமானத்தில் தீப்பிடித்தது.
விமானம் விழுந்த பகுதியில் இருந்த 3 வீடுகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த இரு கார்களுக்கும் தீ பரவியது. அருகிலிருந்த பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்துக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்துக்கு அடியில் சிக்கி ஒரு கார் நசுங்கியது.இந்த விபத்தில் விமானியும், ஒரு பயணியும் உயிரிழந்தனர். விமானம் விழுந்த ஒரு வீட்டில் இருந்த பெண்ணொருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்திலிருந்த ஏனைய பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள், டோக்கியோவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருக்கும் இசுஷிமா தீவுக்குச் சென்று, அங்கு விமான ஓட்டுதல் பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications