பாக்- ஆப்கன் எல்லையில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்: 3 தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் அமெரிக்கா இன்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் நஸ்யா பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் மீது அமெரிக்கா ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மூன்று தீவிரவாதிகள் பலியானதாகவும் தெரிகிறது. மேலும், தீவிரவாதிகள் வைத்திருந்த வாகனங்களும் இத்தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அப்போது அவர், "எல்லை தாண்டிய தீவிரவாதத்தை எதிர்ப்பது மற்றும் தீவிரவாத முகாம்களை முடக்குவது ஆகியவை பாகிஸ்தானின் நீண்டகால அமைதிக்கு மட்டுமின்றி ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான அதன் உறவுகள் மேம்படவும் அவசியம்'' எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications