முதல் விபத்தில் 900 பேர், 2வதில் 3 பேர்: படகு விபத்தில் கொத்து கொத்தாக மடியும் லிபிய மக்கள்
ரோட்ஸ்: கிரீஸில் உள்ள ரோட்ஸ் தீவு அருகே படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
உள்நாட்டு போர் மற்றும் அரசியல் நெருக்கடியாக இருக்கும் லிபியாவில் வசிக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அவ்வாறு வெளியேறுபவர்கள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று சட்டவிரோதமாக குடியேறுகிறார்கள். அவர்கள் கடல் மார்க்கமாக செல்கையில் படகு விபத்து ஏற்பட்டு அவ்வப்போது பலர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 950 பேருடன் லிபியாவில் இருந்து கிளம்பிய படகு லிபிய கடற்கரை அருகே இத்தாலிய தீவான லேம்பீடுசாவில் இருந்து 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் கடலில் கவிழ்ந்தது. இந்த படகு கவிழ்ந்ததில் சுமார் 900 பேர் வரை பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 8 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
படகு கவிழ்ந்த இடத்தில் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை லிபியாவில் இருந்து 100 பேருடன் கிளம்பிய படகு கிரீஸில் உள்ள ரோட்ஸ் தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 93 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படகு கவிழ்ந்ததை பார்த்த பொதுமக்களும் கடலில் குதித்து பயணிகளை காப்பாற்றியுள்ளனர். சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேற வருபவர்கள் கடலில் மூழ்கி பலியாவது பெரும் பிரச்சனையாகி உள்ளது.












Click it and Unblock the Notifications