1990- ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இத்தனை இந்தியர்களா? வெதர்மேன் போட்ட புதிய லிஸ்ட்!
கீவ்: வெளிநாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சண்டையின் போது எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டார்கள் என்பது குறித்த பட்டியலை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.
நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து கொண்டே வந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் மீது போரிடும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. இன்று 4ஆவது நாளாக ரஷ்யா தனது படைகள் மூலம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷ்ய படைகள்
இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் கார்கிவ், ஒடேஸா உள்ளிட்ட நகரங்களுக்குள் நுழைந்து ஏவுகணை தாக்குதல்களையும் குண்டு மழையையும் பொழிந்து வருகிறார்கள். பதிலுக்கு உக்ரைன் படைகளும் ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி வருகிறது. இந்த பதற்றமான சூழலில் உக்ரைனில் உள்ள பிற நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன.

40 ஆயிரம் பேர்
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கவும் பணி நிமித்தமாகவும் பயிற்சிக்காகவும் சென்றுள்ளனர். உக்ரைனில் வான் வெளி மூடப்பட்டுவிட்டதால் தரைமார்க்கமாக பக்கத்து நாடுகளுக்கு சென்று தாயகம் திரும்ப வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் முதல் மீட்பு விமானம்
அந்த வகையில் இந்தியாவின் முதல் மீட்பு விமானம் நேற்று ரூமேனியா சென்று அங்கிருந்து 5 தமிழர்கள் உள்பட 219 பேரை அழைத்துக் கொண்டு மும்பை வந்து சேர்ந்தது. இது போல் இன்னும் ஏராளமானோர் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் இதுவரை வெளிநாடுகளில் நடந்த பிரச்சினைகளால் மீட்கப்பட்ட இந்தியர்களின் பட்டியலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் 1990 ஆம் ஆண்டு குவைத் மீது ஈரான் போரிட்டது. அப்போது 1.70 லட்சம் இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதுபோல் 2006 ஆம் ஆண்டு லெபனான் போரின் போது 1,782 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு முதல் லிபியன் உள்நாட்டு போரின் போது 16,200 இந்தியர்களும் அதே ஆண்டு எகிப்து புரட்சியின் போது 670 இந்தியர்களும், ஏமன் புரட்சியின் போது 698 இந்தியர்களும் மீட்கப்பட்டனர்.

தமிழ்நாடு வெதர்மேன் புள்ளி விவரம்
2014 ஆம் ஆண்டு இரண்டாம் லிபியன் உள்நாட்டு போர் நடந்த போது 3,371 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். அதே ஆண்டில் ஈராக்கில் உள்ள நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றிய போது 3,500 இந்தியர்களும் 2015 ஆம் ஆண்டு யேமனில் சவுதி ராணுவம் தலையீட்டின் போது நடந்த பதற்றத்தில் 4,640 இந்தியர்களும் 2016 ஆம் ஆண்டு தெற்கு சூடான் உள்நாட்டு போரில் 153 இந்தியர்களும் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய போது 448 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications