எங்க மேல கை வச்சா அவ்ளோதான்.. சந்தேகமே வேணாம்.. சவுதி இருக்கு! பாகிஸ்தான் அமைச்சர் பேச்சு
துபாய்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் (Saudi Arabia Pakistan) இடையே 'நேட்டோ' மாதிரியாக ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளில் எதாவது ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது தன் நாடு மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதி இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுப்பது தான். இந்த நடவடிக்கையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவ்ஜா ஆசிப், "இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தானை பாதுகாக்க சவுதி அரேபியா வரும். இதில் சந்தேகமே இல்லை" என்று கூறியுள்ளார்.
சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாகக் கருத்தில் கொள்ளப்படுவதோடு, இருநாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ மாதிரியான ஒப்பந்தம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், சவுதி அரேபியா சென்றார். அவரது இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மீது எந்த ஒரு நாடும் தாக்கினால், ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கும். அதே மாதிரியான ஒரு ஒப்பந்தம் தான் பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை சர்வதேச நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
பாகிஸ்தானை பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்து இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளை செய்து வருவது ஊரறிந்த விஷயம். சமீபத்தில் பஹல்காமில் கூட பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்தான் தாக்குதல் நடத்தி அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனர்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் அதிரடி தாக்குதலால் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான், சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவிடம் வந்து கெஞ்சியது. இதனால், சண்டை நிறுத்தம் செய்தாலும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளது.
இத்தகைய சூழலில் சவுதி அரேபியா - பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தம், இந்தியாவையும் கவனிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப்பிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த காவ்ஜா ஆசிப் கூறியதாவது:-
இந்தியா போர் தொடுத்தால்
"இந்தியா போர் தொடுத்தால் சவுதி அரேபியா பாகிஸ்தானை பாதுகாக்க வரும். இதில் சந்தேகமே இல்லை" என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள Geo TVக்கு அளித்த பேட்டியில் காவ்ஜா இந்த தகவலை கூறியுள்ளார். மேலும், காவ்ஜா கூறியதாவது:- சவுதி அரேபியாவுடனான ஒப்பந்தம் என்பது தாக்குதல் ஒப்பந்தம் என்பதை விட, தற்பாதுகாப்பு ஒப்பந்தமாகும்.
அணு ஆயுதங்கள் சவுதி அரேபியாவுக்கு கிடைக்கும்
சவுதி அரேபியாவுக்கு எதிராகவோ, பாகிஸ்தானுக்கு எதிராகவோ ஏதாவது அத்துமீறல் நடைபெற்றால் நாங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்போம். இந்த ஒப்பந்தத்தை அத்துமீறலுக்கு பயன்படுத்தும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், இந்த ஒப்பந்தம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் சவுதி அரேபியா பயன்பாட்டுக்கும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications