நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பின் தலைமைத் தளபதி கைது
அபூஜா: நைஜீரியாவில் ஆக்கிரமித்து வரும் போகோ ஹரம் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளபதியை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களின் படி தனி நாடு வேண்டி போராடி வருகின்றனர் போகோ ஹரம் தீவிரவாதிகள். கடந்த 2009ம் ஆண்டு முதல் நைஜீரியாவில் இவர்களது ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
ஆயுதம் ஏந்திப் போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாதிகள் இதுவரை நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளனர். மேலும், பலரைக் கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டவர்களில் பலரது நிலைமை என்ன என்பது இன்னமும் விடைக் காணப் படாத கேள்வியாகவே உள்ளது.
இந்நிலையில் அந்த இயக்கத்தின் முக்கிய நபரும் தலைமை தளபதியுமானவரை நைஜீரிய ராணுவம் கைது செய்ததாக சினுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நைஜீரியாவின் முக்கிய நகரான கொடுங்காவைக் கைப்பற்றுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைய முற்பட்ட போது, போகோ ஹரம் தலைமை தளபதி கைது செய்யப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், போகோஹரம் தளபதியை கைது செய்யும் போது நடந்த இத்தாக்குதலின் போது சுமார் 60க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்டுள்ள போகோ ஹரம் தலைமைத் தளபதியின் பெயர், வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நைஜீரிய ராணுவம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது.












Click it and Unblock the Notifications