சொக்கா எனக்கில்லை எனக்கில்லை! அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு கிடைக்காது! புலம்பும் டொனால்ட் ட்ரம்ப்!
நியூயார்க்: இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்படுவதை அமெரிக்கா தடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியது தான் தான் என அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் பல நாடுகளிடையே பதட்டத்தை தணிக்க உதவிய தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்ட போது இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை இணைந்து துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத மையங்களை அழித்தது.
இதற்கு பாகிஸ்தான் எதிர்மறையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்திய ராணுவம் அதை வெற்றிகரமாக தடுத்தது. இந்நிலையில் கடந்த மாதம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு நாட்டு அதிகாரிகளும் கூறினர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், அமெரிக்கா - பாகிஸ்தான் இடையிலான பதட்டங்களை நிறுத்துவதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றியதாக அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து இந்தியாவிலுள்ள எதிர்க் கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பின.
இருந்த போதும் போர் நிறுத்தத்தில் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பிரதமர் நரேந்திர மோடியும் தெள்ளத் தெளிவாக சொல்லி இருந்தனர். ஆனாலும் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இடையேயான போரை நிறுத்த உதவிய தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என கூறி ஆதங்கப்பட்டு இருக்கிறார் ட்ரம்ப். இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப்," காங்கோ ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில் இருநாட்டு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள். ஆப்பிரிக்காவுக்கும் உலகிற்கும் இது ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதால் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா - கொசோவோ, எகிப்து - எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தியதால் எனக்கு போர் நோபல் பரிசு கிடைக்காது. மத்திய கிழக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்ட எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா- உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. அதன் விளைவுகள் என்ன இருந்தாலும் என்னுடைய பணி குறித்து மக்களுக்கு தெரியும். அதுவே எனக்கு முக்கியம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications