இந்தியா & பாகிஸ்தான் இரு நாடுகளையும் மிரட்டினேன்! டிரம்ப் அடுத்து சொன்ன வார்த்தை! வெடிக்கும் சர்ச்சை
ஆம்ஸ்டர்டாம்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ச்சியாகப் பல முறை கூறி வருகிறார். இதற்கிடையே நேட்டோ மாநாட்டிலும் அதே கருத்தைக் கூறிய டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து மிரட்டினேன் என்பது போலப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. அதில் அடி வாங்கிய பாகிஸ்தான், இந்திய எல்லை மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், இந்தியா அதை வெற்றிகரமாகத் தொடர்ந்து முறியடித்தது. மேலும், பதிலடியாகப் பாகிஸ்தானில் பல முக்கிய இடங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
இதனால் சில நாட்கள் பதற்றம் தொடர்ந்து அதிகரித்தது. அப்போது இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது. அதை இந்தியா ஏற்றுக் கொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த மோதலை நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே மீண்டும் இந்தியா பாகிஸ்தான் மோதல் குறித்து டிரம்ப் பேசியிருக்கிறார். வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் இதன் மூலம் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்ததாக டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
டிரம்ப் சர்ச்சை
நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடந்த நேட்டோ மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்படப் பல மோதல்களை தான் தீர்த்து வைத்ததாகக் குறிப்பிட்டார். அங்கு மேலும் பேசிய டிரம்ப், "நான் பல மோதல்களைத் தீர்த்து வைத்திருக்கிறேன். அதில் எல்லாவற்றையும் விட முக்கியமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல்.
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் குறித்து நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இந்த இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. இதனால் இரு நாடுகளும் மோதிக் கொள்வது சரியானது இல்லை. சண்டை மிகவும் மோசமாக இருந்தபோது நான் போன் கால் மூலமாகவே அந்த சண்டையை முடித்து வைத்தேன். வர்த்தகம் குறித்து அழுத்தம் கொடுத்துப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்தேன்.
அடுத்துச் சொன்ன வார்த்தை
நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடப் போகிறீர்கள் என்றால், நாங்கள் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்யப் போவதில்லை என்று இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்தேன்... அப்போது தான் அவர்கள் இல்லை இல்லை வர்த்தக ஒப்பந்தம் வேண்டும் என்று சொல்லி ஒப்புக் கொண்டனர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கடந்த வாரம் என்னை வந்து சந்தித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட எனக்கு ஒரு சிறந்த நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். நான் இருவரையும் சமாதானப்படுத்தினேன்" என்றார். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து மோதிக் கொள்ளப் போகிறது என்றால் அமெரிக்காவுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்து கொள்ள முடியாது என்று இருவரிடமும் கூறியதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்தியா மறுப்பு
இந்த மோதல் விவகாரத்தை நான் தான் முடித்து வைத்தேன் என டிரம்ப் இதுவரை 10 முறைக்கு மேல் கூறிவிட்டார். அவர் சொன்னதைப் பாகிஸ்தான் மட்டும் ஆமோதித்து வருகிறது. டிரம்பிற்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது எனச் சொன்ன பாகிஸ்தான், அவருக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கூட பரிந்துரைத்தது. இருப்பினும், டிரம்பின் இந்த கருத்தை இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications