அவ்வளவு தான் போர் முடிந்துவிட்டது.. எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க.. டிரம்ப் சொன்ன விஷயம் வாவ்!
லாஸ் வேகாஸ்: மத்திய கிழக்கு போர் பொருளாதாரத்தையும், எரிபொருள் விலைகளையும் நேரடியாக பாதித்து வரும் வேளையில் உலக நாடுகளை தாண்டி பொதுமக்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இத்தகைய ஒரு முக்கியமான கட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்.
நெவாடா மாநிலத்தின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், ஈரானில் நடைபெறும் போர் மிக நல்ல விதத்தில் சென்று கொண்டிருப்பதாகவும், அது விரைவில் முடியும் என்றும் உறுதியாக தெரிவித்தார். இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற அவரது நம்பிக்கை, பல நாடுகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவுக்கு, காரணம் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை தடைப்பட்டு உள்ளதால் இந்தியாவில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த பிரச்சனை சரியாக வேண்டுமெனில் ஈரான் போர் முடிந்து ஹார்முஸ் வாயிலாக எரிபொருள் சப்ளை வேகமெடுக்க வேண்டும்.
அதே நிகழ்ச்சியில் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்தார். இந்த ஒப்பந்தம் ஹெஸ்பொல்லா அமைப்பையும் உள்ளடக்கியது என அவர் விளக்கினார். இதன் மூலம் மொத்தமாக வளைகுடா பகுதியில் அமைதி திரும்பியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு குண்டு சத்தம் கேட்காது என்பது வளைகுடா நாட்டு மக்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து லெபனான் மக்கள் விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர். வியாழக்கிழமை அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசிய நிலையில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
போர்நிறுத்தம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை இஸ்ரேல் தெற்கு லெபனான் பகுதியை தொடர்ந்து தாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தாக்குதல்களால் லெபனானில் இதுவரையில் மொத்த உயிரிழப்பு 2,196 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 10 நாள் போர் நிறுத்தம், இரு தரப்புக்கும் இடையேயான பதற்றத்தை தற்காலிகமாக குறைக்கும் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேலின் பிரதமரும் லெபனானின் அதிபரும் அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் வாஷிங்டனில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால அமைதியை நோக்கிய முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிராந்திய அமைதி மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
ஒருப்பக்கம் பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை, அடுத்த 2-3 வாரத்திற்குள் இஸ்ரேல் - லெபனான் மத்தியிலான பேச்சுவார்த்தை நடக்கும் வேளையில் இவ்விரு பேச்சுவார்த்தையும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தீர்வை எட்டினால் வளைகுடாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிடும்.
டிரம்ப் தனது உரையில் அமெரிக்கா ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய நெருங்கிவிட்டதாகவும் , இந்த வார இறுதியில் மற்றொரு சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்காது என்ற அமெரிக்க கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகள் 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் வலுவான ஒப்பந்தத்தை நோக்கி செல்வதாகவும் அவர் விளக்கினார். இந்த முன்னேற்றம் உலக அளவில் எரிபொருள் பாதுகாப்புக்கு முக்கிய சிக்னலாக அமைந்துள்ளது.
இஸ்ரேல்-லெபனான் இடையேயான 10 நாள் போர்நிறுத்தம் ஈரான், கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளால் வரவேற்கப்பட்டுள்ளது. தற்போதைய இந்த முன்னேற்றங்கள் உலக நாடுகளுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளன. அமைதியான தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற டிரம்பின் நம்பிக்கை, பொதுமக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும் பொருளாதார சவால்களை குறைக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.















Click it and Unblock the Notifications