டிரம்ப் விடவே மாட்டார் போல! "இந்தியா- பாக். மோதல் முடிவுக்கு வர நானே காரணம்.." 6வது முறையாக பேச்சு
தோஹா: இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததே நான் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே கத்தாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் மோதல் தன் மூலமாகவே முடிவுக்கு வந்ததாக ஆறாவது முறையாகக் கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டிருந்தது. இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. இதை முறியடித்த இந்தியாவும் திருப்பி தாக்க ஆரம்பித்தது. இதனால் எல்லையோர பகுதிகளில் கிட்டதட்ட போர் சூழல் உருவானது.

டிரம்ப்
இந்த மோதல் முடிவுக்கு வர நான் தான் காரணம் என டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். இதற்கிடையே கத்தாரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் ஆறாவது முறையாக இந்த மோதல் முடிவுக்கு வர நான் தான் காரணம் எனக் கூறியிருக்கிறார்.
அங்கு கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமான தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய டிரம்ப், "நான் மீண்டும் மீண்டும் இதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையைத் தீர்க்க நான் உதவினேன்.. இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் மேலும் மேலும் அதிகரித்து வந்த நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர முயன்றேன். திடீரென பல வகை ஏவுகணைகள் பாயத் தொடங்கின. இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், அதை நாங்கள் தீர்த்து வைத்தோம். அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவே நான் கருதுகிறேன்" என்றார்.
ஆறாவது முறை
என்ன தான் மீண்டும் சொல்ல விரும்பவில்லை என அதிபர் டிரம்ப் சொன்னாலும் கூட மீண்டும் மீண்டும் டிரம்ப் இந்த பிரச்சினை முடிவுக்கு வர நான் தான் காரணம் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வர நான் தான் காரணம் என டிரம்ப் சொல்வது இது ஆறாவது முறையாகும்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. கடந்த மே 7ம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் தொடர்ச்சியாக சில நாட்கள் தாக்குதல் நடத்தியது. முதலில் பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்தியா வீழ்த்த மட்டுமே செய்தது. திருப்பி அடிக்கவில்லை.
இந்தியா சொல்வது
ஆனால், திருப்பி அடிக்க தொடங்கியதும் அதைப் பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. உடனடியாக பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யத் தூதுவிட்டது. பாகிஸ்தானின் டிஜிஎம்ஓ போர் நிறுத்தம் குறித்து கோரிக்கை விடுத்ததாகவும் அதை இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மூன்றாவது நபர் யாரும் பேச்சுவார்த்தைக்குள் வரவில்லை என்றே இந்தியா கூறியிருந்தது. இருப்பினும், டிரம்ப் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததே நான் தான் எனத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.
டிரம்ப் சொல்வது
முன்னதாக கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், "போர் வேண்டாம். நாம் செய்வோம். இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே இதனால் ஹேப்பி. இருவருக்கும் இடையே பல காலமாக மோதல் இருக்கிறது. இதனால் தான் நான் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்க முடியும் என்பதைச் சொன்னேன். இதன் மூலமாகவே அவர்கள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தேன்" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் கடந்த மே 10ம் தேதி முடிவுக்கு வந்திருந்தது. அப்போது பிற்பகலுக்கு மேல் பாகிஸ்தான் எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல் இருந்தது. அப்போது அமெரிக்க அதிபரான டிரம்ப் தான் முதல்முறையாக மோதல் முடிவுக்கு வந்ததைத் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications