இரண்டாம் உலக போர் ஐடியா.. பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா.. டிரம்ப் மெகா திட்டம்!
சீனா - தைவான், ரஷ்யா - உக்ரைன், ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் - லெபனான், அமெரிக்கா - கியூபா, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இப்படி உலகில் தற்போது பல நாடுகள் மத்தியில் போர் பதற்றங்கள் அதிகரிக்கும் வேளையில், உலக நாடுகள் நாடுகள் இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் செயல்படுத்தியது போல் தங்களது ஆயுத உற்பத்தியை வலுப்படுத்தும் வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
குறிப்பாக, நீண்டகால போர்கள் மற்றும் பிராந்திய பதற்றங்கள் இருந்தால் ஒரு நாட்டின் பாதுகாப்பு உபகரண உற்பத்தி மற்றும் விநியோகத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதில் முக்கியமாக அமெரிக்கா..

டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாடின் கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு மோட்டார் ஆகிய இரு பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுப்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேரி பாரா மற்றும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜிம் ஃபார்லி ஆகியோருடன் அமெரிக்க பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இரண்டாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பயணிகள் வாகன உற்பத்தியை நிறுத்திவிட்டு, ராணுவ விமானங்கள், இன்ஜின்கள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வாகனங்கள் தயாரித்தது. இதன் மூலம் அமெரிக்கா "Arsenal of Democracy." என்ற பெருமையைப் பெற்றது.
தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களுக்கு ராணுவ உற்பத்தியில் சிறிய வர்த்தகத்தை வைத்திருந்தாலும் இந்த போர் காலக்கட்டத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியா போர்
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியா போரில் அமெரிக்க ராணுவ ஆயுத விநியோகத்தை பெரிய அளவில் உலக நாடுகள் நம்பியிருக்கிறது. உக்ரைன், சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இஸ்ரேல் என பல நாடுகளுக்கு அமெரிக்கா தான் முக்கிய ஆயுத சப்ளையராக உள்ளது. உக்ரைன்-க்கு கடந்த 4-5 ஆண்டுகளாக அமெரிக்கா ஆயுதம் சப்ளை செய்து வருகிறது. மத்திய கிழக்கில் போர் துவங்கியுள்ளது, இந்த போரில் பல நாடுகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய வேண்டியுள்ளது.
இதோடு அமெரிக்கா கியூபாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது, ஏற்கனவே வெனிசுலாவில் தாக்குதல் செய்துள்ளது. இதனால் அமெரிக்காவில் கையிருப்பில் இருக்கும் ஆயுதம் குறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் வேகமாகவும், அதிகமாகவும் ஆயுதங்களை தயாரிக்க வேண்டும் என திட்டமிட்டு அமெரிக்க அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களை ஆயுத உற்பத்தியில் இறக்க திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்க அரசு இதற்கான பேச்சுவார்த்தை ஈரான் போர் துவங்குவதற்கு முன்பாகவே துவங்கியிருந்தாலும், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டதிலேயே பெரிய அளவில் வெற்றிப்பெற்ற இத்திட்டம் தற்போது தொழில்நுட்பம் மேம்பட்ட காலக்கட்டத்தில் இதை எளிதாக சாதித்துவிட முடியும்.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட தாக்குதல் அமைப்புகளை உற்பத்தி செய்ய முடியுமா என ஆராயப்படுகிறது.
பெண்டகனின் புதிய உத்தி
அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறுகையில், "வணிகத் துறையின் அனைத்து சேவைகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பாதுகாப்பு தொழில்துறை அடித்தளத்தை வேகமாக விரிவாக்குவதே எங்களது இலக்கு" என கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அரசின் பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் இந்த முயற்சியை "அமெரிக்க தொழில்துறையை wartime footing நிலைக்கு கொண்டு செல்லும்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் பேச்சுவார்த்தைகள் கார் நிறுவனங்களுடன் மட்டும் நிற்கவில்லை. ஜி.இ. ஏரோஸ்பேஸ் மற்றும் ஓஷ்கோஷ் உள்ளிட்ட பிற முக்கிய நிறுவனங்களிடமும் ஆரம்பக் கட்ட விவாதங்களில் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications