கத்தார் தனிமைப்படுத்தப்பட்டதற்கு யார் காரணம் ? டிரம்ப் டிவிட்டால் பரபரப்பு
வாஷிங்டன்: கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், பயங்கரவாதத்துக்கான முடிவின் தொடக்கம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் மூலம் கூறியுள்ளார்.
கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், எகிப்து, ஏமன் ஆகிய நாடுகள், கத்தாருடனான ராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக அறிவித்துள்ளன. போக்குவரத்தையும் அவை துண்டித்துள்ளன.
அமீரகத்தில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டை சேர்ந்தவர்கள் 14 நாட்களுக்குள் நாடு திரும்பவும், தூதரக அதிகாரிகள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் கத்தார் நாட்டு விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டரில், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றேன். அப்போது மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு நிதி உதவி தருவதை வளைகுடா நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினேன். இதை நான் கூறியபோது, தலைவர்கள் கத்தாரை நோக்கி கையைக் காட்டினர்.
தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதி அளித்தனர். கத்தாரின் நிலைமையை இப்போது பாருங்கள். இதுவே தீவிரவாதத்தின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த இஸ்ரேல் ஆதரவு அமைப்பு, சில அரபு நாடுகளுடன் கை கோர்த்த தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.