ரஷ்யா விமானிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஆடியோவை ரிலீஸ் செய்தது துருக்கி! மீட்கப்பட்ட விமானி மறுப்பு!!
அங்காரா: தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்யா போர் விமானத்தில் இருந்த விமானிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஆடியோ பதிவு ஒன்றை துருக்கி வெளியிட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு அப்படி எந்த ஒரு எச்சரிக்கையுமே விடுக்கப்படவில்லை என சிரியா ராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையால் 12 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட ரஷ்யா விமானி மறுத்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான ப்ரீ சிரியா ஆர்மி, அல்நூஸ்ரா முன்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க விமான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. சிரியா எல்லையில் ரஷ்யாவின் போர் விமானம் குண்டுவீச்சு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த போது அது தங்கள் நாட்டுக்கு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி துருக்கி விமானப் படை அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ரஷ்யா கடும் ஆத்திரமடைந்தது.
மேலும் போர் விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்த விமானிகளில் ஒருவரை நடுவானிலேயே ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்தனர். மற்றொரு வீரரின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது.
ஹெலிகாப்டர் மீது தாக்குதல்
அவர்களைத் தேடச் சென்ற ரஷ்யா தயாரிப்பு ஹெலிகாப்டர்களில் ஒன்று இயந்திர கோளாறால் தரை இறக்கப்பட்டது. அதை ப்ரீ சிரியா ஆர்மி தீவிரவாதிகள் அமெரிக்காவின் ஏவுகணைகளால் தாக்கினர். இதில் ரஷ்யாவின் கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
12 மணிநேரத்துக்கு பின் மீட்பு
பின்னர் சிரியா ராணுவத்தின் 18 பேர் கொண்ட குழு நடத்திய 12 மணிநேர தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் மற்றொரு விமானி கொன்ஸ்டான்டின் முரக்டின் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் பாராசூட்டில் இருந்து கீழே குதித்து மறைவிடம் ஒன்றில் பதுங்கி இருந்தார். அந்த பகுதி தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதியும் கூட... இருப்பினும் சிரியா ராணுவத்தினர் அங்கு ஊடுருவி ரஷ்யா விமானியிடம் இருந்த ரேடியோ சாதனங்களின் சிக்னல் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.
உயிரிழந்த மற்றும் உயிருடன் மீட்கப்பட்ட விமானிகளுக்கு ரஷ்யாவின் ராணுவத்தினருக்கான உயரிய விருது வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
எச்சரிக்கை விடுத்த ஆடியோ
இதனிடையே ரஷ்யா போர் விமானத்தில் இருந்த விமானிகளுக்கு நாங்கள் 5 நிமிட இடைவெளியில் 10 முறை எச்சரிக்கை விடுத்தோம்; எச்சரிக்கையை மீறியதால் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்தினோம் என்று ஐ.நா. பொதுச்செயலர் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு துருக்கி விளக்கம் கொடுத்திருந்தது. மேலும் நாங்கள் எச்சரிக்கை விடுத்தது உண்மைதான் எனக் கூறி அதற்கான ஆடியோ பதிவையும் துருக்கி வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில், வேறுபாதையில் செல்லுங்கள் என திரும்ப திரும்ப சொல்வது இடம்பெற்றுள்ளது.
விமானி மறுப்பு
ஆனால் உயிருடன் மீட்கப்பட்ட ரஷ்யா விமானி கொன்ஸ்டான்டின் முரக்டின் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் வரைபடத்தை மிகச் சரியாகத்தான் பார்த்திருந்தேன்.. கீழேயும் எல்லை தெளிவாக தெரிந்தது. எங்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் ரேடியோ மூலமோ அல்லது வேறு எந்த வகையிலும் விடுக்கப்படவில்லை. அவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
எங்கள் பகுதியில் நுழைந்தது...
இந்நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தய்யிப், தங்களது நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் ரஷ்யாவின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; அந்த விமானத்தின் பாகங்கள் துருக்கி பகுதியில் விழுந்து 2 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
திட்டமிட்ட தாக்குதல்
ஆனால் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இது ஒரு திட்டமிட்ட தாக்குதல்.. அப்படியே உங்கள் நாட்டுக்குள் விமானம் நுழைந்திருந்தாலும் அதை வெளியேற செய்ய வேண்டுமே தவிர இப்படி சுட்டு வீழ்த்தக் கூடாது என கடுமையாக கூறியுள்ளார்.
ரஷ்யா உடனடி பதிலடி
துருக்கியின் இந்த நடவடிக்கையால் அந்நாட்டுடனான ராணுவ ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்திய ரஷ்யா, பொருளாதார ரீதியான உறவுகளையும் ஒப்பந்தங்களையும் ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளது.