வங்காள தேச எழுத்தாளர் நிலோய் கொலை வழக்கு- 2 பேர் கைது
டாக்கா: வங்காளதேசத்தில் வலைத்தள எழுத்தாளர் நிலோய் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளதேசத்தில் மதச்சார்பற்ற வலைத்தள எழுத்தாளர் நிலோய் சக்கரவர்த்தி நீல் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கமான அன்சருல்லா பங்களா டீம் என்ற அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைக்குப் பின்னர், அன்சருல்லா பங்களா டீமைச் சேர்ந்த சாத் அல் நகின், மசூத் ராணா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தற்போது போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலைத்தள எழுத்தாளர்கள் பிறரின் மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் வரம்பு மீறி எழுதக்கூடாது என்று காவல்துறை ஐ.ஜி கூறினார். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், நீல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீல் கொலை குறித்து அவரது நண்பர் புதிய தகவல்களை கூறியுள்ளார். அவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியதாகவும், காவல்துறை அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications