சிங்கப்பூர் கலவர வழக்கு: 2 இந்தியர்களுக்கு சிறை- ஒருவருக்கு 24, மற்றொருவருக்கு 18 மாதம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் மூர்த்தி கபில்தேவ் மற்றும் மோங்கன் அன்பழகன் என்ற 2 பேருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் 8ம் தேதி நடந்த பேருந்து விபத்தில் அங்கு கட்டிட வேலை பார்த்து வந்த சக்திவேல் குமாரவேலு(33) என்ற தமிழர் பலியானார். இதையடுத்து இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லிட்டில் இந்தியாவில் பெரும் கலவரம் வெடித்தது. அப்போது பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசாரின் 25 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், 54 போலீசார் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இந்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் 25 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்த இந்த கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இந்தியர்களான மூர்த்தி கபில்தேவ்(25) மற்றும் மோங்கன் அன்பழகன்(41) ஆகியோருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட கபில்தேவுக்கு 24 மாத சிறை தண்டனையும், ஒரு பேருந்து மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கியதை ஒப்புக் கொண்ட அன்பழகனுக்கு 18 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறையும், சவுக்கடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications