இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 2 பேர் பலி... வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
இந்தோனேசியாவில் அதிகாலையில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜகார்டா: மக்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவின் ஜாவா தீவை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் உயிருக்கு பயந்து மக்கள் இரவு முழுவதும் வீதிகளிலேயே காத்துக்கிடந்தனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவை மையமாகக் கொண்டு நேற்று இரவு இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. தலைநகர் ஜகார்டாவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.5ஆகு பதிவாகியுள்ள நிலநடுக்கமானது, ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கி.மீ. ஆழத்தில் உருவாகியுள்ளதாக அமெரிக்க ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துளள்து.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜாவாவின் கடற்கரையோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் 2 மணி நேரத்திற்கு பின்னர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் நிலநடுக்கத்திற்கு 2 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கினால் தான் அவற்றில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்ற விவரங்கள் தெரிய வரும். மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள டாசிக்மாலயா, பன்கன்ட்ரன் மற்றும் சியாமிஸ் பகுதிகளில் நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://t.co/sC8JjAWKHT
— Flora Carol (@Floreins87) December 15, 2017
@ira_sutherland #earthquakeindonesia
நிலநடுக்கத்தால் பல மருத்துவமனை கட்டிடங்கள் குலுங்கியுள்ளன, இதனையடுத்து நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். நிலநடுக்கம் பீதி காரணமாக மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.