முஸ்லீம் மாநாட்டில் பரபரப்பு... மேலாடையின்றி புகுந்து போராட்டம் நடத்திய 2 பெண்கள்
பாரீஸ்: பிரான்ஸில் நடந்த முஸ்லீம்கள் மாநாட்டின் இடையே புகுந்த மேலாடை இல்லாத இரண்டு பெண்கள் மேடையில் ஏறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு பெண்களையும் மாநாட்டு நிர்வாகிகளும், போலீஸாரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவினர்தான் இதை நடத்தி பரபரப்பைக் கிளப்பி விட்டனர்.

பிரான்ஸில் முஸ்லீம்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் பல முஸ்லீம் அறிஞர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க ஆண்களுக்கு உரிமை உண்டா என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.
அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேடையேறி வந்தனர். இருவரும் மேலாடை இல்லாமல் இருந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி காற்றில் கைகளால் பன்ச் செய்தபடி கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
அந்த இரு பெண்களும் பெமென் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இப்படித்தான் அடிக்கடி போராட்டங்களில் குதித்து பரபரப்பைக் கிளப்புவார்கள். குறிப்பாக மேலாடை இல்லாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
தங்களது உடலில் தங்களது போராட்டத்துக்கான காரணத்தையும் அவர்கள் எழுதி வைத்திருந்தனர். அதன் அர்த்தம் யாரும் என்னை அடக்க முடியாது, அடிமைப்படுத்த முடியாது என்பதாகும்.
உடனடியாக விரைந்து வந்த பாதுகாவலர்கள் அப்பெண்களை அங்கருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். அப்போது மாநாட்டு அமைப்பாளர் குழுவைச் சேர்ந்த ஒரு ஆண், அப்பெண்களில் ஒருவரை உதைத்தது மேலும் பரபரப்பைக் கூட்டியது.












Click it and Unblock the Notifications