அதிபர் பதவி ஏற்றதும் ட்ரம்ப் செய்யப்போகும் முதல் வேலை என்ன தெரியுமா?
வாஷிங்டன்: அதிபராக பதவி ஏற்றதும் முதல் வேலையாக பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவரே கூட எதிர்ப்பாராத ஒன்று. வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக அவர் பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்ற கையோடு முதல் நாளில் அவர் கையெழுத்திடுவது எந்த கோப்பில், எதற்கு முன்னுரிமை என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் 'டி.பி.பி.' என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள் முறைப்படி ஒப்புதல் வழங்கவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் 12 நாடுகளின் மந்திரிகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது உலக பொருளாதாரத்தில் 40 சதவீத பங்களிப்பைக் கொண்டது.
இப்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் நடவடிக்கை, உள்நாட்டில் புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித்தரும் என நம்புகிறார் ட்ரம்ப்.
அதே நேரத்தில் தேர்தலின்போது ட்ரம்ப் கூறி வந்த ஒபாமா கேர் சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வது பற்றியோ, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது பற்றியோ எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.