பெண்ணை ஏர்போர்ட்டில் இறக்கிவிட்டு அவரின் வீட்டில் திருடச் சென்ற உபேர் டாக்சி டிரைவர்!
டென்வர்: அமெரிக்காவின் டென்வர் நகரில் பெண் பயணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற உபேர் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான நிலையத்திற்கு செல்ல உபேர் டாக்சியை அழைத்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற டாக்சி டிரைவர் ஜெரால்டு மான்ட்கோமரி(51) அவரை டென்வர் விமான நிலையத்திற்கு தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த பெண்ணை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட மான்ட்கோமரிக்கு ஒரு யோசனை வந்துள்ளது. உடனே அவர் அந்த பெண் பயணியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

திருட்டு
பெண் பயணியின் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து பின்கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றார் டாக்சி டிரைவர் மான்ட்கோமரி. ஆனால் வீட்டில் இருந்த அந்த பெண் பயணியின் தோழி டிரைவரை பார்த்துவிட்டார். உடனே மான்ட்கோமரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ஃபேஸ்புக்
விமான நிலையத்தில் இருந்து அந்த பெண் தனது தோழிக்கு மான்ட்கோமரியின் புகைப்படம் அடங்கிய ரசீதை போனில் அனுப்பி வைத்தார். அதில் இருந்த டிரைவரின் புகைப்படத்தை பார்த்த தோழி அதிர்ந்து விட்டார். உடனே அவர் அந்த ரசீதை ஃபேஸ்புக்கில் போட்டு கவனமாக இருங்கள் மக்களே என்று எச்சரித்துள்ளார்.

கைது
பயணியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற டிரைவர் மான்ட்கோமரியை போலீசார் கைது செய்தனர்.

பலாத்காரம்
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி டெல்லியில் உள்ள 25 வயது இளம்பெண் ஒருவர் உபேர் டாக்சி டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லியில் உபேர் டாக்சிக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டது.

அமெரிக்கா
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பெண் பயணிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியா
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 19 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 30 வயது உபேர் டாக்சி டிரைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உபேர்
உபேர் டாக்சி டிரைவர்கள் பலர் பாலியல் பலாத்காரம் மற்றும் சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது குறித்து டாக்சி நிறுவனம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications