ஏரிக்கரையில் விளையாடிய 2 வயது சிறுவன்.. லபக்கென கவ்வி விழுங்க முயற்சித்த நீர்யானை!
கம்பாலா: உகாண்டாவில் இரண்டு வயது குழந்தையை நீர்யானை ஒன்று உயிரோடு விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீர் நிலைகளின் அருகில் இருக்கும் போது எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். திடீரென வெள்ளம் ஏற்படும் அபாயம் போல, நீர் நிலைகளில் இருந்து, முதலை, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் தாக்கும் அபாயமும் அதிகம்.
எப்போதும் இந்த விசயத்தில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பது போல உகாண்டாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

2 வயது சிறுவன்
உகாண்டாவின் கட்வே கபடோரா நகரில் உள்ள ஏரிப் பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, இகா பால் என்ற இரண்டு வயது சிறுவன் ஒருவன், ஏரிக் கரையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அச்சிறுவனின் வீடும் ஏரிக் கரையில் இருந்துள்ளது. எனவே வீட்டின் அருகே அச்சிறுவன் விளையாடியுள்ளான்.

விழுங்க முயற்சி
அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஏரியில் இருந்து நீர்யானை ஒன்று அச்சிறுவனைப் பிடித்துள்ளது. தனது பெரிய தாடைகளால் அச்சிறுவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அது விழுங்க ஆரம்பித்துள்ளது. இதனை ஏரிக்கரையில் இருந்த கிறிஸ்பாஸ் அகோன்சா என்ற நபர் பார்த்துள்ளார்.

பத்திரமாக மீட்பு
உடனடியாக சிறுவனைக் காப்பாற்றும் நோக்கில், கையில் கிடைத்த கற்களை எல்லாம் அந்த நீர்யானை மீது தூக்கி வீசியுள்ளார் கிறிஸ்பாஸ். கல்லடி பட்டதால் வலி தாளாமல், பாதி விழுங்கிய சிறுவனை, அந்த நீர்யானை மீண்டும் தரையில் துப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்பாஸின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அச்சிறுவனி மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

வெறிநாய்க்கடி தடுப்பூசி
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அச்சிறுவன் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக உகாண்டா போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சிறுவனின் கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குவியும் பாராட்டு
சம்பந்தப்பட்ட ஏரிக்கரையில் இப்படி நீர்யானை தாக்குதல் நடத்திய சம்பவம் இதுதான் முதல்முறை என்கின்றனர் அப்பகுதி மக்கள். அதோடு துரிதமாகச் செயல்பட்டு, சிறுவனை உயிரோடு மீட்டதற்காக கிறிஸ்பாஸையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர். அவர் அதிரடியாக கற்களை வீசித் தாக்கியதாலேயே அந்த நீர்யானை, அச்சிறுவனை துப்பி விட்டது, இல்லையென்றால் முழுவதுமாக விழுங்கி இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் எச்சரிக்கை
இந்த சம்பவத்தை அடுத்து, ஏரிகள் மற்றும் வனவிலங்கு மையங்கள், விலங்குகள் சரணாலயங்கள் போன்ற விலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு அருகில் தங்கியிருப்போர், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். பொதுவாக நீர்யானைகள், தாவரவகை உணவுகளையே சாப்பிடும் என்றாலும், சம்பவத்தன்று அந்த நீர்யானை மிகுந்த பசியோடு அல்லது ஆக்ரோஷமாக இருந்ததால், சிறுவனை சாப்பிட நினைத்திருக்கலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications