இங்கிலாந்து தேர்தலில் 10 இந்திய வம்சாவளியினர் வெற்றி
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு வியாழக்கிழமையன்று தேர்தல் நடைபெற்றது. இதில், கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக மொத்தம் 59 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர். நேற்று இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நீண்ட காலமாக எம்.பி. பதவி வகித்து வருபவருமான கெய்த் வாஸ் தான் போட்டியிட்ட ‘லீசெஸ்டர் ஈஸ்ட்' தொகுதியில் வெற்றி பெற்றார். இதே கட்சியின் இன்னொரு வேட்பாளர் வீரேந்திர சர்மா, ஈலிங்சவுத்ஹால் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழிலாளர் கட்சியின் சார்பில் வால்சால் சவுத் தொகுதியில் போட்டியிட்ட வலேரி வாஸ், தனது தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இதே கட்சியின் சார்பில் லண்டன் ஈஸ்ட் தொகுதியில் களம் கண்ட சீமா மல்கோத்ரா கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய வேட்பாளரான பிரீத்தி படேல், தான் போட்டியிட்ட விதாம் தொகுதியில் 27,123 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நாராயணமூர்த்தி மருமகன்
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரிச்மாண்ட் தொகுதியில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யு.கே.ஐ.பி. வேட்பாளர் மேத்யூ குக்கை ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தொடர் வெற்றியும் தோல்வியும்
கடந்த முறை எம்.பி.க்களாக இருந்த கெய்த் வாஸ், வலேரி வாஸ், வீரேந்திர சர்மா, சீமா மல்ஹோத்ரா, லிசா நாண்டி, சாஜித் ஜாவித், பிரீத்தி படேல், அலோக் சர்மா, சைலேஷ் வாரா ஆகியோர் மீண்டும் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எம்.பி.,யாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பால் உப்பல் வோல்வோர்ஹாம்ப்டன் தென் மேற்கு தொகுதியில், இம்முறை தோல்வியைத் தழுவினார்.
10 எம்.பிக்கள்
கடந்த நாடாளுமன்றத்தில் இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட 10 எம்.பி.க்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போதைய தேர்தலில் அதே எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருமகனுக்கு வாழ்த்து
ரிச்மாண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற தனது மருமகனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி வாழ்த்து கூறியுள்ளார். ரிஷிக்கு வாழ்த்துகள். அவரும் அக்ஷதாவும் கடினமாக உழைத்தார்கள். வில்லியம் ஹேகிற்குப் பிறகு ரிஷி அங்கு வெற்றி பெற்றுள்ளதால் அவருக்கு பெரிய கடமைகள் இருக்கின்றன. ஒரு எம்.பி.யாக அதனை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்" என்று தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications