இங்கிலாந்து தீம் பார்க்கில் ரோலர் காஸ்டர் சரிந்து விழுந்து விபத்து... 4 பேர் படுகாயம்!
லண்டன்: இங்கிலாந்தில் ரோலர் கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் பலர் அதில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆல்டன் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு ஆல்டன் டவர்ஸ் தீம் பார்க் உள்ளது. இங்குள்ள ரோலர் காஸ்டரில் வழக்கம் போல பலர் சவாரி செய்து விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அது விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். பலர் இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சம்பவத்தின்போது 16 பேர் ரோலர் காஸ்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 18 மற்றும் 27 வயதுடைய இரண்டு ஆண்கள், 19 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் காயமடைந்ததாக வெஸ்ட் மிட்லேன்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இவர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை விமான ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டோக் மற்றும் கவன்ட்ரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து நடந்ததும் ஆல்டன் டவர்ஸ் வளாகத்தி்ல் இருந்த அத்தனை பேரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இந்த தீம் பார்க்கில் இதுவர இப்படி ஒரு விபத்து நடந்ததில்லை. இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரோலர் காஸ்டரானது தரையிலிருந்து 25 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது அப்படியே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பென் ரிச்சர்ட்சன் என்பவர் கூறுகையில், ரோலர் காஸ்டர் விழுந்தபோது பெரும் சத்தம் எழுந்தது. அதில் இருந்தவர்கள் காப்பாற்றக் கோரி பலத்த கூக்குரல் இட்டனர். மேலும் பூங்காவின் பிற பகுதிகளில் இருந்தவர்களும் பயந்து ஓடினர் என்றார்.
தற்போது இந்த பூங்கா மூடப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.