ஆப்கானில் இருந்து 83 பயணிகளுடன் மீட்பு விமானம் கடத்தப்படவில்லை- உக்ரைன், ஈரான் திட்டவட்ட மறுப்பு
தெஹ்ரான்/ கியிவ்: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டவரை மீட்டு நாடு திரும்பிய உக்ரைன் விமானம் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. காபூலில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் கடத்தப்படவில்லை என்பதை உக்ரைன் மற்றும் ஈரான் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்கள் வசமாகிவிட்டன. பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் போராளிக் குழுக்கள் வசம் இருக்கிறது. அப்பகுதியைக் கைப்பற்ற தாலிபான்கள் முயற்சிக்கின்றனர். அதேநேரத்தில் பஞ்ச்சீர் போராளி குழுவினருடன் தாலிபான்கள் பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டவர் மீட்பு பணிகள்
தலைநகர் காபூல், தாலிபான்கள் வசமானது முதலே வெளிநாட்டவரும் ஆப்கான் மக்களும் பல்லாயிரக்கணக்கில் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். காபூல் விமான நிலையத்தில் பல்லாயிரக்கணக்கில் குவிந்துள்ள தங்களது நாட்டு குடிமக்களை மீட்க அனைத்து நாடுகளும் மீட்பு விமானங்களை அனுப்பி வருகின்றன.

உக்ரைன் விமானம்
இந்திய விமானப் படை விமானங்கள் தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் உக்ரைன் நாடும் தங்களது நாட்டு மக்களை மீட்பதற்காக காபூல் விமானநிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று விமானம் ஒன்றை அனுப்பி வைத்தது. அந்த விமானம் உக்ரைன் நாட்டு மக்களை மீட்டு திரும்பிக் கொண்டிருந்தது.

உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக பரபரப்பு
அப்போது நடுவானில் விமானத்தில் இருந்த ஆயுதம் தாங்கிய நபர்கள், துப்பாக்கி முனையில் விமானத்தை கடத்தியதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உக்ரைன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் யெவ்ஜெனி யென், தங்களது நாட்டு விமானம் நடுவானில் கடத்தப்பட்டு ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என கூறியிருந்தார். ஆனால் அப்போதே இதை ஈரான் திட்டவட்டமாக மறுத்தது.

விமானம் கடத்தப்படவில்லை
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விமானத்தில் மொத்தம் 83 பேர் பயணித்தனர். இவர்களில் 31 பேர் உக்ரைன் நாட்டு மக்கள். தற்போது உக்ரைன் விமானம் கடத்தப்படவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒலே நிகோலேன்கோ விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஆப்கானில் இருந்து இதுவரை மொத்தம் 256 பேர் நாடு திரும்பி உள்ளதாவும் அவர் தெரிவித்தார். அத்துடன் காபூலில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானின் Mashhad நகரில் எரிபொருள் நிரப்பிவிட்டு உக்ரைன் தலைநகர் கியிவ்-க்கு பாதுகாப்பாக வந்தது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதனால் உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வெளியான விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications