தடுப்பூசி வேண்டும்.. ஆனா அவங்களோடது மட்டும் வேண்டவே வேண்டாம்.. ஸ்புட்னிக் வி-க்கு தடை போட்ட உக்ரைன்
கியேவ்: உக்ரைன் நாட்டில் கொரோனா தடுப்பூசி ஒப்புதல் விரைவாக வழங்கும் வகையிலும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குத் தடை விதிக்கும் வகையிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களில் உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் உச்சத்திலிருந்தது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஆகஸ்ட் மாதம், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இந்தத் தடுப்பூசியின் மூன்றாம்கட்ட மருத்து சோதனை தற்போது பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
இருப்பினும் கூட மிகவும் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தொடர்ந்து தயக்கம் காட்டியே வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டிலுள்ள பயோலிக் என்ற நிறுவனம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தியைச் செய்யவும் விநியோகிக்கவும் அனுமதிக்கக் கோரி அந்நாட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்தது.

அனுமதி இல்லை
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குத் தடை விதிக்கும் வகையில் தீர்மானம் ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைனின் சுகாதார அமைச்சர் மக்ஸிம் ஸ்டெபனோவ், "சிலர் அரசியல் தூண்டுதல்களால் ரஷ்யாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பித்து, தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். ஆனால், ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள இந்த நாட்டில் ஒருவர்கூட நிச்சயம் பதிவு செய்ய மாட்டார்கள்" என்றார்.

இரண்டு கோடி தடுப்பூசி
அதேநேரம் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் ஃபைசர் தடுப்பூசியின் ஒரு கோடி முதல் இரண்டு கோடி டோஸ்களை உக்ரைன் அடுத்த மாதம் பெறவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் இதுவரை எந்த தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசிகளைப் பெறும்போது. அவற்றுக்கான அனுமதியை உக்ரைன் அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி ஒப்புதலை விரைவுபடுத்தும் தீர்மானமும் உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ரஷ்யா vs உக்ரைன்
உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், கிழக்கு டான்பாஸ் பகுதியில் சுமார் 14 ஆயிரம் பேரை ரஷ்யா கொன்று குவித்ததாகவும் உக்ரைன் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications