கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் மாகாணங்கள் ரஷியாவுடன் இணைய பொதுவாக்கெடுப்பு!
செவஸ்டோபோல்: கிரிமியாவைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் மாகாணங்கள் ரஷியாவுடன் இணைவதற்கான பொதுவாக்கெடுப்பை இன்று நடத்தியுள்ளன.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக செயல்பட்டு வந்த கிரிமியாவில் கடந்த மார்ச் மாதம் திடீரென கிளர்ச்சி ஏற்பட்டது. உக்ரைன் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்திய கிளர்ச்சியாளர்கள், கிரிமியாவை ரஷியாவுடன் இணைப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தினர்.
இதில் ரஷியாவுடன் இணைவதற்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிரிமியா பகுதி ரஷியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் ரஷிய அதிபர் புதினும் முக்கிய பங்காற்றினார்.
ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா மீது அந்நாடுகள் பொருளாதார தடையும் விதித்தன.
கிழக்கு உக்ரைனில் வாக்கெடுப்பு
இந்நிலையில் கிரிமியாவை தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. அங்குள்ள 12 நகரங்களில் உள்ள அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த கிளர்ச்சியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டது. டொனெட்ஸ்க், லுகன்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களில், கிரிமியாவில் நடைபெற்றது போல பொதுவாக்கெடுப்பு நடத்த கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த வாக்கெடுப்பை ஒத்தி வைக்க ரஷிய அதிபர் புதினும் கேட்டுக்கொண்டார். ஆனாலும் இன்று இந்த வாக்கெடுப்பு திட்டமிட்டபடி நடத்தப்பட்டது.
கிரிமியாவில் புதின்
இதனிடையே ரஷிய அதிபர் புதின் நேற்று கிரிமியா பகுதியில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்தார். 2-ம் உலகப்போரில் ரஷியா வெற்றிபெற்ற 69-வது ஆண்டு தினத்தையொட்டி, அங்குள்ள செவஸ்டோபோல் பகுதிக்கு சென்ற அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷிய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கிரிமியா பகுதியில் புதின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவகாரம் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனும் புதினின் பயணத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications