போரில் சொதப்பல்.. திட்டிய புதின்.. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருக்கு மாரடைப்பாம்.. சொல்வது உக்ரைன்
கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டியதால் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு மாரடைப்பு ஏற்பட்டதாக உக்ரைன் உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் துவங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் ராணுவம் பொதுமக்களுடன் இணைந்து தாய்நாட்டை காக்க போராடி வருகிறது. இவர்களின் பதில் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலியாகி வருகின்றனர். இதனால் உக்ரைனை முழுவதுமாக இன்னும் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

பொதுவெளியில் இல்லை
இந்நிலையில் உக்ரைனை எளிதாக கைப்பற்றலாம் என நினைத்த ரஷ்யாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் மார்ச் 11ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களை கிளப்பியது. ஏனென்றால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் விளாடிமிர் புதினுக்கு இவர் தான் பக்கபலமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கிளம்பிய யூகங்கள்
ஆனால் உக்ரைனில் ராணுவ படைகள் தங்களின் யுக்திகளை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விளாடிமிர் புதின், அவரை திட்டியதாகவும், இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வராத நிலையில் இது யூகங்களாகவே இருந்தன.

மாரடைப்பால் பாதிப்பு
இந்நிலையில் தான் உக்ரைன் உள்நாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தனது பேஸ்புக்கில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛"உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக விளாடிமிர் புதின், செர்ஜி ஷோய்க்குவுடன் பேசினார். அப்போது ராணுவ நடவடிக்கை தாமதம் தொடர்பாக திட்டியுள்ளார். இதனால் அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு என் என் பர்டென்கோவின் ராணுவ மருத்துவமனையில் உள்ளார்'' என குறிப்பிட்டுள்ளார்.

பழைய வீடியோவா...
மேலும், ‛‛மார்ச் 24ல் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு, விளாடிமிர் புதினுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற வீடியோ தொலைக்காட்சி ஒன்றில் வெளியானது. ஆனால் இது புதியதா, அல்லது பழைய வீடியோவா என்பது எனக்கு தெரியவில்லை'' என தெரிவித்துள்ளார்.

சரியான நேரமில்லை
இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‛‛உக்ரைன் மீதான சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடர்பாக பிஸியாக உள்ளார். ஊடகங்கள் முன்பு அவர் தோன்றுவதற்கு இது சரியான நேரமில்லை '' என கூறினார்.












Click it and Unblock the Notifications