முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் "நுழைந்த" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதல் காரணமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு பிப். மாதம் ரஷ்யா ஆரம்பித்த போர் இன்னுமே தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் போர் தொடங்கிய போது, அனைவரும் சில வாரங்களில் இது முடிவடைந்துவிடும் என்றே நினைத்தார்கள்.
இருப்பினும், அந்தப் போர் இப்போது 1.5 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இடையில் சில காலம் போரில் எந்தவொரு பெரிய நிகழ்வுகளும் ஏற்படாமல் இருந்த நிலையில், இப்போது அது மீண்டும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

முடங்கிய ஏர்போர்ட்: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இரவு நேரத்தில் ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்குள்ள இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக மாஸ்கோவில் உள்ள ஏர்போர்ட் மூடப்பட்டுள்ளது. இது குறித்து மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் கூறுகையில், "இன்று இரவு உக்ரைன் நாட்டின் ஆளில்லா விமானங்கள் விமான நிலையத்தைத் தாக்கின. இதில் இரண்டு கட்டிடங்கள் சிறிதளவு சேதமடைந்துள்ளன. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை" என்றார்.
உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 500 கிமீ (310 மைல்) தொலைவில் மாஸ்கோ அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இதுபோன்ற ட்ரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ட்ரோன் தாக்குதல்: இப்போது நடந்துள்ள இந்தப் புதிய ட்ரோன் தாக்குதல் காரணமாக மாஸ்கோவில் உள்ள வனுகோவோ விமான நிலைய செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அங்குத் தரையிறங்க வந்த மற்ற விமானங்கள் அருகில் இறுக்கும் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டது. இதனால் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
அதேநேரம் இந்த ஏர்போர்ட்டில் ட்ரோன் தாக்குதல் நடப்பது இது முதல்முறை இல்லை. மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள இதே விமான நிலையத்தில் இந்த மாத தொடக்கத்திலும் ட்ரோன் தாக்குதல் நடந்தது. அப்போதும் விமானச் சேவை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத்து. அப்போது மொத்தம் 5 உக்ரைன் ட்ரோன்கள் தங்களைத் தாக்கியதாக ரஷ்யா கூறியிருந்தது.
ரஷ்யா குற்றச்சாட்டு: மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்தும் ட்ரோன் தாக்குதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் உக்ரைன் நாட்டிற்குத் தொடர்ந்து உதவி வருவதாகவும், அவர்களின் உதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல்களை உக்ரைன் நாட்டினால் நடத்த முடியாது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை தனது தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தில் இரண்டு உக்ரைன் ஏவுகணைகள் வழிமறித்து அழித்ததாக ரஷ்யா கூறியிருந்தது. இருப்பினும், அதன் பாகங்கள் விழுந்ததில் 16 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
உலக நாடுகள்: உக்ரைன் போருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. மேலும், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் நாட்டிற்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications