"ரஷ்யாவின் கெமிக்கல் ஆயுதங்கள்..!"கையில் பட்டாலே தீக்காயம்..பகீர் கிளப்பும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பாஸ்பரஸ் கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார்.
கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை ரஷ்ய ராணுவம் ஆரம்பித்தது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யா மீது பல்வேறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் எனப் பலரும் ரஷ்யா, புதின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இருப்பினும், இந்தப் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் போர் தொடங்கி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் கூட போர் முடியவில்லை. இந்நிலையில், நேட்டோ உதவி தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்,

நேட்டோ
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கீவ் நகருக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லா ராணுவ உதவிகளை வழங்குமாறு நேட்டோ அமைப்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"உக்ரைன் நகரங்களையும் இங்குள்ள மக்களையும் காப்பாற்றக் கட்டுப்பாடற்ற ராணுவ உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யா எங்களுக்கு எதிராகக் கட்டுப்பாடின்றி முழு ஆயுதங்களையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துகிறது. எனவே, அதிலிருந்து காப்பற்ற முழு ராணுவ உதவி எங்களுக்குத் தேவை.

மேற்குலக நாடுகள்
ரஷ்ய தாக்குதலில் இருந்து உக்ரைன் நாட்டை காக்க மேற்குலக நாடுகள் பல தற்காப்பு ஆயுதங்களை வழங்கியுள்ளன. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் ரஷ்ய ராணுவத்தைச் சமாளிக்கத் தாக்குதல் நடத்தும் வகையிலான ஆயுதங்கள் தேவை. உங்களிடம் இருக்கும் ராணுவ விமானங்களில் ஒரு சதவிகிதம், ராணுவ டாங்கிகளில் ஒரு சதவிகிதம் கொடுத்தால் அதுவே எங்களுக்கு போதும்" என்றார். ரஷ்ய ராணுவம் கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாஸ்பரஸ் குண்டுகளால்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாஸ்பரஸ் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தித் தாக்குதல் நடத்துகிறது. இது ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது தீப்பிடித்து கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் இந்த பாஸ்பரஸ் குண்டுகளால் பெரியவர்கள் குழந்தைகள் எனப் பலரும் உயிரிழக்கின்றனர். எங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம், ரஷ்ய தாக்குதல்களிலிருந்து உக்ரைன் நாட்டையும் உக்ரைன் மக்களையும் நேட்டோ அமைப்பால் காப்பாற்ற முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications