வான்வழி தடை கோரிக்கை மூலம் 3-ம் உலகப் போரை தூண்டிவிடும் உக்ரைன் அதிபர்? உஷாராகும் யு.எஸ்., ஐரோப்பா
கீவ்: உக்ரைன் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கும் அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் பிரகடனம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அப்படியான ஒரு அறிவிப்பு நிச்சயம் 3-ம் உலகப் போருக்கு காரணமாகிவிடும் என அஞ்சி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நிராகரித்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பை முற்று முழுதாக நம்பி அண்டை நாடான ரஷ்யாவை உக்கிரமாக பகைத்துக் கொண்டது உக்ரைன். அப்பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க ரஷ்யா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தங்களை நிராகரித்தது உக்ரைன். மேலும் உக்ரைனை இன்னமும் விட்டு வைத்தால் நாட்டு வாசலில் நேட்டோ படைகளை நிறுத்த உதவி செய்துவிடும் என பதறியது ரஷ்யா. இதன் விளைவுதான் உக்ரைன் மீதான 13 நாட்களாக நடைபெறும் தொடர் யுத்தம்.

நேட்டோ வராததால் விரக்தி
தம் மீது யுத்தம் நடத்தினால் நேட்டோ படைகள் எப்படியும் களத்துக்கு வந்து காப்பாற்றும் என கணக்குப் போட்டது உக்ரைன். ஆனால் களநிலவரமே களேபரமாகிப் போனது. ரஷ்யாவுடன் அமெரிக்கா நேரடியாக மோத முடியாது; உக்ரைனை மனிதாபிமான அடிப்படையில் ஆதரிக்கிறோம் என கைவிரித்தார் அமெரிக்கா அதிபர் ஜோ பிடன். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பெருமளவு பொருளாதார தடைகளை விதித்த கையோடு உக்ரைன் யுத்தத்தில் தங்களது கடமை முடிந்து என கை கழுவிக் கொண்டிருக்கின்றன. இதனால் உக்ரைன் இப்போது செய்வது அறியாமல் விரக்தி அடைந்துள்ளது.

உக்ரைன் கோரிக்கையால் அச்சம்
இந்த விரக்தியின் வெளிப்பாடாகத்தான், எங்களை மேற்குலக நாடுகள் கைவிட்டுவிட்டன.. எங்கள் முதுகில் குத்திவிட்டன என்றெல்லாம் புலம்புகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அதேநேரத்தில் உக்ரைன் வான்வழியை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பையாவது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரகடனம் செய்ய வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை கெட்டியாகப் பிடித்து கொண்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி. மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண கோரிக்கைதானே என தோன்றும். ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் உலக நாடுகளுக்கும் தெரியும் இது விபரீதமான கோரிக்கை என்பது. இப்படி ஒரு பிரகடனத்தை அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் வெளியிட்டால் மூன்றாவது உலக மகா யுத்தம் நிச்சயம் என்பதில் சந்தேகமே இல்லை என்பதுதான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு.

நேட்டோ சரத்து
உக்ரைன் வான்வழியை தடை செய்து அறிவிப்பது எப்படி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்? என்பது பொதுவான கேள்வி. அமெரிக்கா தலைமையில் நேட்டோ அமைப்பில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இதில் 27 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இந்த நேட்டோ அமைப்பின் முதன்மையான சரத்தே நேட்டோ நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தால் அனைத்து நாடுகளும் யுத்த களத்துக்கு வர வேண்டும் என்பதுதான்.
Recommended Video

உக்ரைனின் உள்நோக்கம்?
இப்போது அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைன் மீதான வான்வழி தடை பிரகடனத்தை வெளியிடுகிறது என வைத்துக் கொள்கிறோம். இந்த தடையை மீறி ரஷ்யா போர் விமானங்கள் உக்ரைனில் தாக்குதல் நடத்தும். இது நேட்டோ நாடுகளை தாக்குதல் நடத்த தூண்டும். ரஷ்யாவின் போர் விமானங்களை நேட்டோ நாடுகள் தாக்க தொடங்கினால் இயல்பாகவே மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும். இதனை அனைத்து உலக நாடுகளும் உணர்ந்துள்ளன. ஒருவேளை நம்மை காப்பாற்ற வராத அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பழிவாங்கும் யுக்தியாக உக்ரைன் அதிபர் இப்படியான ஒரு கோரிக்கையை இடைவிடாமல் வலியுறுத்துகிறாரோ? என்கிற கேள்வியையும் மூத்த அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications