ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கோரிக்கை! அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்தான் என்ன
கீவ்: போர் தொடர்பாக பெலராஸ் நாட்டில் உக்ரைன்- ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர் தொடுத்தது. இந்தப் போர் 4 நாட்களைக் கடந்த 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அங்கு வான்வழி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்தி வெளிநாட்டினரைத் தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கியது பேச்சுவார்த்தை.. போர் நிற்குமா.. உலகமே எதிர்பார்ப்பு
அமைதி பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது. முதலில் பெலாரஸ் நாட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்த உக்ரைன், வேறு ஐரோப்பிய நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவித்தது. இருப்பினும், இதற்கு ரஷ்யா மறுத்த நிலையில், கடைசியாக பெலராஸ் நாட்டிலேயே இன்று இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என அனைவரும் நிம்மதி அடைந்தனர். இந்தச் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களை உடனடியாக சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து இன்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "புதிய சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை உடனடியாக ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும் என முறையிடுகிறோம். ஐரோப்பியர்களுடன் ஒன்றாகச் சமமாக இருக்க வேண்டும். அதுவே நியாயமானது என்று நான் நம்புகிறேன்.
நம்பாதீர்கள்
ரஷ்யா நடத்திய தாக்குதலின் முதல் 4 நாட்களில் மட்டும் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். உக்ரேனியர்கள் யார் என்பதை உலகுக்குக் காட்டியுள்ளனர். ரஷ்யா இப்போது என்னவாக உள்ளது என்பதும் உலகத்திற்குக் காட்டப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் போரை நிறுத்த வேண்டும். ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். உங்கள் தளபதிகளை நம்பாதீர்கள். மாஸ்கோவில் இருந்து நடக்கும் போலி பிரசாரத்தை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
உயிரிழப்பு
மேலும் ரஷ்யா இந்த போர் தொடங்கியது முதல் 4,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ராணுவ நடவடிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ரஷ்ய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உக்ரைன் அரசு அறிவித்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக பேர் உயிரிழந்திருக்கலாம் என்று ஐநா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும் பரபரப்பு
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வந்தது. அப்போது மேற்குலக நாடுகளிடம் ரஷ்யா வைத்த முக்கிய கோரிக்கை நேட்டோ அமைப்பில் உக்ரைனைச் சேர்க்கக் கூடாது என்பது தான். அதாவது உக்ரைன் என்பது முழுவதுமாக அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதைத் தான் புதின் வலியுறுத்தினார். இந்தச் சூழலில் ஒருபுறம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ள நிலையில், மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.