"விரக்தியில் புதின்.. அடுத்து அணு ஆயுதங்கள் தான்!" பகீர் கிளப்பும் ஜெலன்ஸ்கி.. என்ன காரணம் தெரியுமா
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யாவின் பகீர் திட்டங்கள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். மாதம் முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து, இந்த போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், விரைவில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரக் கூடாது.. தடை விதித்த ரஷ்யா.. அதிரடி முடிவு
உக்ரைன் போர்
ரஷ்யப் பகுதிகள் மற்றும் ரஷ்ய வீரர்களைக் குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யக் கடற்படையின் முக்கிய கப்பல்களில் ஒன்றான மோஸ்கவா கப்பலைக் குறி வைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் அந்தக் கப்பல் மூழ்கியது. உக்ரைனின் ஏவுகணை தாக்குதலால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள்
இந்நிலையில் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தப் போரில் ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடிய ஆபத்து உள்ளதால் உலகின் அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், "உக்ரைன் மக்களின் உயிரை புதின் மதிப்பதில்லை. எனவே, அவர் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதங்கள் அல்லது கெமிக்கல் ஆயுதங்களை நோக்கித் திரும்பலாம்,
உலகமே கவலைப்பட வேண்டும்
ரஷ்ய அதிபர் புதின் இப்போது இருக்கும் மனநிலை அனைவருக்கும் தெரியும். போரில் ரஷ்யா பின்னடைவைச் சந்தித்து உள்ளது. எனவே, புதின் பெரியளவில் விரக்தியில் உள்ளார். எனவே, அணு ஆயுதங்களால் ஏற்படும் அச்சுறுத்தலை நம்மில் யாரும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. நான் மட்டுமல்ல. உலகம் முழுவதும், அனைத்து நாடுகளும் இது குறித்துக் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் இப்படி நடக்க வாய்ப்புள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
கெமிக்கல் ஆயுதங்கள்
எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கெமிக்கல் ஆயுதங்கள் அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம். அவர்களால் அதைச் செய்ய முடியும். நாம் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இது உக்ரைன் நாட்டிற்கு மட்டுமானது இல்லை. ஒட்டுமொத்த உலகமும் தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
ரஷ்யா எச்சரிக்கை
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதின் உடன் நெருக்கமாக இருக்கும் நபரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான டிமிட்ரி மெத்வதேவ் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த இரு நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைந்தால் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். நேட்டோ அமைப்பு கிழக்கு ஐரோப்பாவில் வளர்ந்தால் அணு ஆயுதங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்றும் அவர் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உயிரிழப்பு
அதிபர் ஜெலன்ஸ்கி மேலும் கூறுகையில், "இந்தப் போரில் இதுவரை சுமார் 2,500 முதல் 3,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 10 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் இந்த போரில் காயமடைந்து உள்ளனர். அதேநேரம் இந்தப் போரில் ரஷ்யா வீரர்கள் 19,000 முதல் 20,000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டு உள்ளனர். அது குறித்துப் பேசுவது வேதனைக்குறியது தான்.
Recommended Video
ரஷ்யா
கெர்சன், பெர்டியன்ஸ்க், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் அப்பாவி மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தாய்நாட்டையும் தாய்நாட்டின் சுதந்திரத்தைக் காக்கவும் உயிரைத் தியாகம் செய்து உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் போர் பல வாரங்களாகத் தொடரும் நிலையில், இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டில் இருந்து பல லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.