ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 1000 ஸ்வீடன்-ஜெர்மனி இளைஞர்கள்
பெர்லின்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனி இளைஞர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து கைப்பற்றப் பட்ட பகுதிகளை இணைத்து தனி நாடு ஒன்றை அமைத்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள். அந்நாட்டில் தங்களுக்கென்று ராணுவத்தையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்த ராணுவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கத்திய நாடுகளான ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து 1000 இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இதில், ஸ்வீடனில் இருந்து மட்டும் 500க்கும் அதிகமான இளைஞர்கள் சேர்ந்துள்ளனராம். இத்தகவலை ஸ்வீடன் உளவுத்துறை தலைமை அதிகாரி ஆண்டர்ஸ் தர்ன்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஜெர்மனியில் இருந்து 500க்கும் அதிகமான இளைஞர்கள் ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாக ஜெர்மன் அமைச்சர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஜெர்மன் மற்றும் ஸ்வீடன் இளைஞர்களுடன் சில பெண்களும் சென்றிருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.