30 ஆண்டு கால தடை நீங்குகிறது... அமெரிக்காவில் இனி "கே" ஆண்களும் ரத்ததானம் வழங்கலாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட ஆண்கள் ரத்ததானம் வழங்க விதிக்கப்பட்டிருந்த 30 ஆண்டு கால தடையை அந்த நாட்டு அரசு நீக்கியுள்ளது.
இனி ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்ட ஆண்களும் ரத்ததானம் செய்யலாம். இருப்பினும் இன்னொரு ஆணுடன் செக்ஸ் ரீதியான உறவு வைத்துக் கொண்டு 12 மாதங்கள் ஆன பின்னர்தான் அவர்களால் ரத்ததானம் செய்ய முடியும்.
இந்த தடை நீக்கத்தை அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை பிறப்பித்துள்ளது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பரவலை தடுக்க பல நவீன வழிகள் வந்துள்ளதைத் தொடர்ந்து இந்த தடை உத்தரவு தேவையில்லை என்று ஆய்வாளர்களின் கருத்தை ஏற்று, இம்முடிவுக்கு உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை வந்துள்ளதாம்.

இருப்பினும் இந்த உத்தரவும் கூட பாரபட்சமானதே என்று ஓரினச் சேரக்கை உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது கேலிக்கூத்தானது. திருமணமான, ஒரே நபருடன் குடித்தனம் செய்யும் ஒரு கே நபர் ரத்ததானம் செய்யக் கூடாது. அதேசமயம் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆண் தர முடியும் என்பது நியாயமற்றது என்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஜனநாயகக் கட்சி எம்.பி ஜாரேட் போலிஸ் கூறியுள்ளா்.
ஏற்கனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இதேபோல, கடைசியாக செக்ஸ் வைத்துக் கொண்ட 12 மாதங்களுக்குப் பிறகு ரத்ததானம் செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications