மீண்டும் 'முடங்கும்’ அபாயத்திலிருந்து தப்புகிறது அமெரிக்க அரசு!
வாஷிங்டன்(யு.எஸ்): சமீபத்தில் அரசியல் காரணங்களுக்காக அமெரிக்க அரசு முடங்கியது நினைவிருக்கலாம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட இருந்த அபாயத்திலிருந்து அமெரிக்க அரசு தப்புகிறது.
குடியரசுக் கட்சியின் பால் ரயன் , ஜனநாயகக் கட்சியின் பேட்டி முர்ரே ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த பட்ஜெட் மசோதா காங்கிரஸ் சபையில், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியுள்ளது. அடுத்த வாரம் செனட் சபையிலும் ஜனநாயகக்கட்சியின் முழு ஆதரவுடன் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு செலவீனங்களுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 'பொருளாதார முடக்கம்' பிரச்சினை இருக்காது. இது நிறைவேறாத பட்சத்தில் ஜனவரி மாதம் மீண்டும் அரசு முடங்கும் அபாயம் இருந்தது.
குடியரசுக் கட்சிக்குள் பிளவு
கடந்த நான்கு ஆண்டுகளாக, குடியரசுக் கட்சி தீவிர வலதுசாரிகளான டீ பார்ட்டி குழுவினரின் தாளத்திற்கு ஏற்ப செயல்பட்டு வந்தது. ஒபாமா அரசுக்கு எந்த விதத்திலும் ஆதரவு கொடுப்பதில்லை என்ற நிலைப்பாடு கொண்ட 'டீ பார்ட்டி குழுவினர் ஆதரவில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள், அரசு மசோதாக்கள் நிறைவேற விடாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அவைத் தலைவர் ஜான் பேனரும் அவர்களின் போக்குக்கே தலையாட்டி வந்தார். திடீரென்று நேற்று அவர் டீ பார்ட்டி குழுவினருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பட்ஜெட் மசோதாவில், ஜனநாயகக் கட்சியினரின் அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் காங்கிரஸ் சபையில் நிறைவேற அவைத் தலைவர் ஜான் பேனர் பெரும் ஒத்துழைத்தார். அவருடைய தற்போதைய நிலையினால் குடியரசுக் கட்சியினர் காங்கிரஸ் சபையில் இரண்டாக பிளவுப் பட்டுள்ளனர்.
குடியேற்ற உரிமை மசோதா நிறைவேறுமா?
இந்த ஆண்டு குடியேற்ற உரிமை சீர்திருத்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்று ஜான் பேனர் முன்னதாக அறிவித்திருந்தார். அவரது தற்போதைய நிலைப்பாட்டின் மூலம் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு குடியேற்ற உரிமை சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றுவார்களா என்ற ஆவல் பிறந்துள்ளது.
லத்தீன் இன மக்களின் ஆதரவை கிட்டதட்ட முற்றிலுமாக இழந்து விட்ட குடியரசுக் கட்சியினர் இந்த மசோதா நிறைவேற விருப்பமாக இருந்தாலும், டீ பார்ட்டி குழுவினர் கடும் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அவர்களை ஒரம் கட்டியதன் மூலம் ஜான் பேனர், மசோதாவை நிறைவேற்ற வழி செய்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இந்த நெருக்கடியிலிருந்து அரசு தப்பித்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குச் சந்தையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. டாவ் மற்றும் நாஸ்டாக்கில் ஒரு புள்ளி அதிகரித்துக் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications